Homeசெய்திகள்இந்தியாபெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் - குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் – குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!

-

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவ தொடர்பாக குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் குந்தலஹாலியில் இயங்கி வரும் புகழ்பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கபேயில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி மதியம் 12.55 மணிக்கு திடீரென்று பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இதில் உணவக ஊழியர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? அல்லது பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? என்ற சந்தேகங்கள் முதலில் எழுந்த நிலையில், உணவகத்தின் முன்பகுதியில் உணவருந்தும் இடத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் சிலிண்டர் எதுவும் வெடிக்கவில்லை என்று கபே நிர்வாகம் தெரிவித்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. சிசிடிவி காட்சிகளின் படி இரண்டு முறை வெடிகுண்டு வெடித்திருப்பது தெரிய வந்தது. வெடிகுண்டு வெடித்த இடத்தில் சந்தேகத்திற்குரிய கைப்பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கபே பகுதியில் உள்ள மேலும் சில சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. ஆறு பேர் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த கைப்பை வெடித்ததாகவும், அந்த பையில் குண்டு இருந்திருக்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. இதில் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மேலும் என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளது.

MUST READ