மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கல்லூரி வளாகத்திலேயே பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தூரில் உள்ள பார்மசி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அசுதோஷ், இவர் தனது கல்லூரி சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது மாலை 4 மணியளவில் கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மா, தனது வீட்டுக்கு செல்ல காரில் ஏற முயன்றார். அப்போது விமுக்தாவை வழிமறித்த அசுதோஷ், தனது மதிப்பெண் பட்டியலை தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பேசிக்கொண்டிருக்கும்போதே விமுக்தா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில், முன்னாள் மாணவர் அசுதோஷ்க்கு 40 சதவீத தீக்காயமும், விமுக்தாவுக்கு 80 சதவீத தீக்காயமும் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் பகவத் சிங் கூறுகையில், “விமுக்தா வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் கையில் சில தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன” எனக் கூறினார்.
அசுதோஷ், ஏற்கனவே கல்லூரியில் உள்ள ஆசிரியர் ஒருவரை கத்தியதால் தாக்கியதாக கூறி, சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஜாமீன் பெற்று சில வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
