மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் குறுகிய பாதையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ நிலையத்தைச் சான்றாகச் சுட்டிக்காட்டி, கோவைக்கு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெறும் இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
புனே மாடலும்… கோவைக்கான கோரிக்கையும்
புனே நகரின் கஸ்பா பேட் பகுதியில் வெறும் 25 முதல் 30 அடி அகலம் மட்டுமே கொண்ட குறுகிய தெருவில், மெட்ரோ ரயில் நிலையம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பாட்டில் உள்ளது. அங்கு பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை அருகில் நிறுத்திவிட்டு, ரூ.10 முதல் ரூ.20 வரையிலான குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், புனேவில் இத்தகைய குறுகிய பாதைகளில் மெட்ரோ சாத்தியமானபோது, கோவையில் மட்டும் சாலைகளின் அகலம் குறைவாக உள்ளது என்ற காரணத்தைக் கூறி மத்திய அரசு அனுமதி அளிக்காமல் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது எனத் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாளை உண்ணாவிரதப் போராட்டம் – காவல்துறை அனுமதி மறுப்பு
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவைக்கு வருகை தரவுள்ள சூழலை ஒட்டி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் நாளை அறவழி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒன்றிய அரசைக் கண்டித்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், கோவை மெட்ரோ திட்டத்திற்கான கோரிக்கை குரல்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
