எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு தோல்விகரமான வெற்றி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக அதிகார துஷ்பிரயோகம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “வாக்கு நடைபெறும் இடத்தில் எந்தவித சோதனையும் நடைபெறவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்களுக்கு தோல்விகரமான வெற்றிதான். எங்களை பொறுத்தவரை நாங்கள்தான் தேர்தலில் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம். இந்த தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள்.

அதிகார துஷ்பிரயோகம் செய்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் திமுக அரசுக்கு மிகப்பெரிய ஒரு பயம். இந்த தேர்தலிலும் இதுபோன்று அவர்கள் பயந்ததில்லை. இடைத்தேர்தலுக்காக ரூ.350 கோடியை திமுக செலவு செய்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது.
ஓபிஎஸ் வழக்கு- சட்டரீதியாக சந்திப்போம்
சசிகலா எங்களை விட்டுவிட்டு, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடட்டும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம்” எனக் கூறினார்.


