எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க- ஜெயக்குமார்
அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிக்கின்றனர், அவர்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு பாராட்டுக்கள். அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிக்கின்றனர், அவர்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கலாம். பிரதானமான எதிர்க்கட்சியின் தலைவருக்கே இங்கு பாதுகாப்பு இல்லை. இனிமேல் தமிழ்நாட்டை போராட்டக்களமாக பார்க்கலாம். திமுக இதற்கு மேல் ஆட்சிக்கு வரமுடியாது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், திமுக அமைச்சர்கள் அத்துணை பேரும் கம்பி எண்ணுவார்கள். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவருக்கே பாதுகாப்பில்லை.
அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைக்க கூடாது என்பது திமுகவின் எண்ணம். அதற்காகவே எடப்பாடி பழனிசாமி மீது திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவினருக்கு அதிகார மமதை. தென்மாவட்ட மக்கள் அதிமுகவுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்” என்றார்.