‘‘நான் அணிந்திருக்கும் காக்கி உடையை கழட்டி வைத்து விட்டு ஒண்டி ஒண்டி வா பார்ப்போம் என சீமான் சொல்கிறார். நான் ஓய்வு பெற்றாலும் அவர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவேன்.
ஏற்கனவே காக்கி சட்டையை கழட்டி வைத்துவிட்டு வா என பேசியவர் தற்பொழுது எனக்கும் வருண் குமாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என பேசுகிறார். சீமானின் பேச்சில் குழப்பமும் பொய்யும்தான் எப்பொழுதும் இருக்கிறது’’என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டிஐஜி வருண்குமார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளப்பதிவில், ‘‘நேற்று திருச்சியில் வருண்குமார் என்பவர் தனிப்பட்ட முறையில் (அதிகாரியாக வரவில்லை என அவரே சொல்கிறார்) அண்ணன் சீமான் அவர்கள் குறித்து பொதுவெளியில் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கிறார்!
தொழிலதிபர் மூலமாக அண்ணன் சீமான் அவர்கள் தனக்கு செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார், யார் அந்த தொழிலதிபர் என்பதைச் சொல்வாரா? மைக் கிடைத்தால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா வருண்? நாம்தமிழர் கட்சிக்கும் உங்களுக்கும் மோதல் என சொல்றீங்க?
36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும்? உங்களின் பொய் வழக்குகளும் வழக்கின் போது பறிக்கப்பட்ட அலைபேசிகளை வைத்து நீங்கள் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும் பொது சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது!
நீங்கள் போன அதே நீதிமன்றத்தில் நீங்கள் எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம்! சட்டமும் நீதியும் யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்!
மற்றபடி மன்னிப்பு என்பது அண்ணன் சீமானின் வரலாற்றிலேயே கிடையாது. யார் தூது விட்டது? யார் கெஞ்சியது? யார் பத்திரிகையாளர்களை அனுப்பி பேசியது? என்பதை விலாவாரியாக பேசுவோம் ’’ எனத் தெரிவித்துள்ளார்.