சீமான் வீட்டில் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷூக்கு எதிராக வேறொரு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது; இதில் வரும் 3 தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் நேற்று சென்னை வளசரவாக்கம் போலீசார் ஒட்டிச் சென்ற சம்மன் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு விசாரிப்பதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜ் தலைமையிலான போலீசார் சென்றனர்.
அப்போது சீமான் வீட்டுப் பாதுகாவலர் இன்ஸ்பெக்டரைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த போலீசார், பாதுகாவலரையும் சம்மனைக் கிழித்த சீமானின் உதவியாளர் சுபாகரையும் கைது செய்தனர். இந்நிலையில் அதிரடி திருப்பமாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.