Homeசெய்திகள்அரசியல்வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

-

அதிமுகவை சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அன்புமணி ராமதாஸ் செய்ய வேண்டாம், அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓபிஎஸ் பக்கம் மூன்று நான்கு பேர் தான் உள்ளனர், நாலு ஆணி ஒரு கோனி வைத்துள்ளவர்கள் தான் ஓபிஎஸ் தரப்பினர். ஓபிஎஸ் குழுவினர் ஒரு வெங்காயம். வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. அதுதான் அவர்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினரை கலாய்த்தார் ஜெயக்குமார்.

சென்னை ராயபுரத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராயபுரம் சூரிய நாராயண சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அன்பு மணி ராமதாஸ் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். ஒரு பக்கம் வருத்தமும் வேதனையும் ஒரு பக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

ops

பாமகவை ஏற்றிவைத்த ஏணி தான் அதிமுக. அப்படி ஏற்றி விடவில்லை என்றால் பாமக என்ற கட்சியே கிடையாது. அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அதிமுக ஆட்சியில் 5 சீட்டு கொடுத்த உடனே நான்கு இடத்தில் வெற்றி பெறுகிறார்கள். நான்கு இடத்தில் ஜெயித்ததால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் அப்படி பேசினால் உங்கள் பக்கம் உள்ளவர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் என்று கூறினார். அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என்றார் ஜெயக்குமார்.

பலம்வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அதிமுக சிறுமை வாய்ந்ததாக மாறி விடுமா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

சிறுமைப் படுத்துகின்ற வேலையை அன்புமணி ராமதாஸ் செய்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார் முன்னாள் அமைச்சர்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள், இடைக்கால ஆசிரியர்கள் போராடுகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தையும் செய்து தருகிறேன் என முதல்வர் கூறினார். ஆனால் இடைக்கால ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள், அதற்காக அமைக்கப்பட்ட குழு கண்துடைப்பு குழு என்று அவர் கூறினார்.

நத்தை வேகத்தில் திமுக அரசு நடந்து வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டு ஒப்பந்த ஊழியர்கள் போராடி வருகிறார்கள், அரசு வேலைகள் நிரப்பப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அது குறித்த கேள்விக்கு, பட்டா நாங்கள் தான், எங்க கிட்ட தான் பட்டா உள்ளது, சிட்டாவும் எங்க கிட்ட தான் உள்ளது, தேர்தல் ஆணையம் லெட்டர் எப்படி பொருந்தும்.

எதிரணி என்று சொன்னால் கூட 20, 30 பேர் வேண்டும். ஓபிஎஸ் பக்கம் மூன்று, நான்கு பேர் தான் உள்ளனர். நாலு ஆணி ஒரு கோனி வைத்துள்ளவர்கள் தான் ஓபிஎஸ் தரப்பினர். அவர்களிடம் பட்டா சிட்டா உள்ளிட்ட எதுவுமே கிடையாது. கொடி எங்களிடம் தான் உள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

போலியான அரசியலை செய்து வருவது தான் ஓபிஎஸ்யின் வாடிக்கையாக உள்ளது. அவர்களிடம் தொண்டர்கள் ஆதரவு கிடையாது. ஓபிஎஸ் குழுவினர் ஒரு வெங்காயம். வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது, அதுதான் அவர்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது அநாகரிகமான செயல் என்றும் இரும்பு கரம் கொண்டு அடக்கி ஓடுக்கி அதை யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

MUST READ