சென்னை: சமூக வலைதளங்களில் தம்மைக் குறித்து பரவி வரும் தவறான வீடியோ பதிவிற்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர். சரத்குமார் விரிவான விளக்கம் அளித்துள்ளார். மேலும், திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் சரத்குமார் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கண்டு ரசித்தார். அப்போது, தங்களது குழந்தைக்குப் பாலில் கலந்து கொடுப்பதற்காக, மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை ஒன்றை அவர் இடித்து, நுணுக்கிக் கொண்டிருந்ததாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நேரத்தில் அருகில் இருந்த சிலர் இதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் “அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தினார்” என்ற முற்றிலும் தவறான மற்றும் பொய்யான தகவலுடன் வைரலாக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், “நான் எனது குடும்பத்தினருடன் தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு குழந்தைக்கு மருந்து கொடுப்பதற்காக மாத்திரையை நசுக்கியதை முற்றிலும் தவறாகச் சித்தரித்து, திட்டமிட்ட முறையில் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு, பொதுவெளியில் யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்களா? இது முழுக்க முழுக்க எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் அவதூறு முயற்சியாகும்” என்று கொதிப்புடன் தெரிவித்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களைப் பரப்பி, பொதுமக்களிடையே வீண் குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சரத்குமார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
