ஃபெஞ்சல் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாநிலங்களவையில் விளக்கிய வைகோ. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்று கூறி மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என்னும் கோரிக்கை வைத்தார்.
குளிர்கால கூட்டத்தொடரில் 6-வது நாளான இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து கேள்வி நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ பேசினார். அப்போது ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் உள்ளதாகவும், விமானம் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் தடைபட்டதுடன், 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.
புயலின் காரணமாக பெய்த கன மழையினால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கருக்கு மேல் விவசாய பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மோசமான நிலையில் பாதிப்பை சந்தித்துள்ளதாக வைகோ கூறியுள்ளார்.
பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக மின்சாரம் தாக்கியும் , சுவர் இடிந்து விழுந்தும் இதுவரை குழந்தைகள் உட்பட 10 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ள நிலையில் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களும் புயல் மற்றும் பெருமழையால் சிதைந்துள்ள நிலையில் உடனடியாக மீட்பு பணிக்கு தேவையான குழுக்களையும் பெருமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவையும் மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். புயல் மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை மறு சீரமைக்க உரிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் மாநிலங்களவையில் உறுப்பினர் வைகோ பேசியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி