ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற திமுக துணைத் தலைவர் கனிமொழி கடிதம் அனுப்பி உள்ளார்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பினர், புது டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன், ஆராய்ச்சி கல்வி மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதுடன் தந்தை பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகிய தலைவர்கள் படங்களை சேதப்படுத்தி உள்ளனர் என்பதையும் கடிதத்தில் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார்.


காயமடைந்த தமிழ் நாசர் என்னும் மாணவர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட பிறகும் தாக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், தாக்குதல் நடந்த போது டெல்லி போலீசார் வன்முறையை தடுக்க தவறியதோடு பார்வையாளர்கள் போல இருந்ததற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது முதன்முறையல்ல என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தாக்குதல் நடத்திய ABVP அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மாணவர்களை பாதுகாக்கவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.


