இரண்டு துப்பாக்கியுடன் பயணிகளை மிரட்டிய, 4 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை. தீவிரவாதிகளா? என்ற அச்சத்தில் பயணிகள் ஓட்டம்.கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து, திண்டுக்கல்,மதுரை, கொடைரோடு வழியாக, இன்று திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில், திண்டுக்கல்லை அடுத்து வந்தபோது, நீண்ட தலைமுடி மற்றும் பெரிய டிராவல் பேக்குகளுடன் நான்கு இளைஞர்கள் நவீன கை துப்பாக்கியுடன் துப்பாக்கியை மாறி மாறி உபயோகிப்பது போலவும், புல்லட் சொருகுவது போலவும், கைசாகை செய்தும், துப்பாக்கியை சுடுவதுபோல காட்டி சக பயணிகளை மிரட்டுவது போல் அச்சுறுத்தியுள்ளனர். இதனால், அச்சமடைந்த இரயில் பயணிகள் ரயில் பெட்டியில் உள்ள ரயில்வே அவசர எண் மூலம் ரயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, கொடைரோடு ரயில்வே காவல் துறையினர் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான, 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், கொடைரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரயில்,ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் உடனடியாக பிரச்சனைக்குரிய ரயில் பெட்டியை சுற்றி வளைத்த காவல்துறையினர், நான்கு இளைஞர்களையும் கையும் களவுமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கி அவர்களின் உடைமைகளை சோதனை செய்து, அவர்களிடமிருந்து 2 கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது, பயணிகள் தப்பி ஓடினர். மேலும், அவர்கள் தீவிரவாதிகளா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்த போலீசார், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு துப்பாக்கி நவீன ரக துப்பாக்கி மாடலை சேர்ந்த பொம்மை துப்பாக்கி என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், காவல்துறை விசாரணையில் நான்கு இளைஞர்களும் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன்ஷெரீப் (19) , கண்ணூரைச் சேர்ந்த அபு ரஜாக் (24), பாலக்காட்டைச் சேர்ந்த ஜபால்ஷா (18), மற்றும் காசர்கோட்டைச் சேர்ந்த சினான் (20) என்பதும் அவர்கள் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரயிலில் மதுரை வரை சென்று, மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவிற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் அவர்கள் கை துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது தீவிரவாதிகளா? வேறு ஏதும் நோக்கத்திற்காக சென்றவர்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம் கொடைரோடு பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.