மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றோடு மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிராக சிஐடியூ (CITU) அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். தமிழர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், உடனடியாக ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று சென்னையில் உள்ள பல்வேறு பணிமனைகள் முன்பாக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைவாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டு உரிமைப் பறிப்பு:
மாநகரப் போக்குவரத்து கழகத்தில் சுமாா் 1,800 நடத்துநர் பணியிடங்களை வெளிமாநில தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது உள்ளூர் இளைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கை சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரானது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

பணிமனைகள் முன்பாக தீவிர முழக்கங்கள்:
சென்னை முழுவதும் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள், தமிழர்களின் பணிவாய்ப்பைப் பாதுகாக்கும் வகையிலும், ஒப்பந்த முறையைக் கைவிடக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். அரசு உடனடியாக இந்த முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
