
மதுரை கள்ளழகர் கோவிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவானது கடந்த 13ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் ஆடி பௌர்ணமி தினம் மற்றும் ஆடித் திருவிழாவின் 9ம் நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் நடைபெறுகிறது. அதன்படி சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை 5:30 மணி முதல் 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து 4 ரத வீதிகளில் வலம் வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை படம் பிடித்து இழுத்து ,சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் சித்திரை மாதம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தொடர்ந்து ஆடி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழாவும் முக்கிய விழாவாக பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருப்பதால், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
