15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வணிக வாகனங்களின் வாகன பதிவு ரத்து
நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் அரசு பேருந்துகள், பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்கள் உட்பட வணிக வாகனங்களின் வாகனப் பதிவுகளை ரத்து செய்யும் மத்திய அரசு திட்டம் இன்று முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கும் வகையில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஸ்கார்பிங் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் படி ஏப்ரல் 1-ம் தேதி முதல், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்கள், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் உட்பட, 15 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகள் ரத்து செய்யப்பட்டு, ரத்து செய்யப்பட உள்ளன. நாட்டின் பாதுகாப்புக்காகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் சிறப்பு நோக்க வாகனங்கள் அதாவது இராணுவம் , காவல் துறை உள்ளிட்ட துறையினருக்கு மட்டுமே இந்த விதி பொருந்தாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

குறிப்பாக ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை ரத்து செய்த பிறகு வாங்கப்படும் வாகனங்களுக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரை வரி தள்ளுபடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே தகுதியற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றவும், ஸ்கார்பிங் கொள்கை படி குறைந்தபட்சம் ஒவ்வொரு நகர மையத்திலிருந்தும் 150 கிலோமீட்டருக்குள் ஒரு ஆட்டோமொபைல் ஸ்கிராப்பிங் நிலையத்தை உருவாக்குவதையும் இலக்காக முன்வைத்து ஸ்கார்பிங் கொள்கை வடிவமைக்கப்பட்டது. எனவே வாகனத்தின் ஆரம்ப பதிவு தேதியிலிருந்து பதினைந்து ஆண்டுகள் காலாவதியான பிறகு , மோட்டார் வாகனங்களுக்கு ஏற்ப பதிவுசெய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதி மூலமாக வாகனங்களை ஸ்கார்பிங் செய்து புதிய வாகனங்களுக்கு சாலை வரியில் விலக்கு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்த மட்டில் அரசு சார்பில் போக்குவரத்து கழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படுகின்றன. அந்த வகையில் போக்குவரத்து கழகங்களுக்கு உட்பட்ட 1,680 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது அதன்படி அவற்றை முழுவதுமாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 3,436 பேருந்துகளில் 529 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவையாக பட்டியலிடபட்டுள்ளது , இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை அழைத்துச் செல்லவும் , சில பேருந்துகள் ஆங்காங்கே பணிமனைகளில் இயக்க முடியாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

மண்டல வாரியாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 529 பேருந்துகள் விழுப்புரத்தில் 270 பேருந்துகள் ; கும்பகோணம் 250 பேருந்துகள் மதுரையில் 150 பேருந்துகள் திருநெல்வேலியில் – 130 பேருந்துகள் கோவையில் 120 பேருந்துகள் சேலத்தில் 90 பேருந்துகளும் என மொத்தம் சுமார் 1680 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் இவை தவிர கிரேன் லாரிகள் , ஜீப்கள் பிரிவில் 600க்கும் மேற்பட்டவை 15 ஆண்டுகளை கடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு பேருந்துகளை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இந்த பேருந்துகள் விரைவில் ரத்து செய்யப்பட இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..
இதனிடையே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அந்த பேருந்துகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்து இருக்கிறது , ஸ்கார்பிங் கொள்கைப்படி பொதுமக்களுக்கான அரசு பேருந்து சேவை என்பது எந்த விதத்திலும் பாதிக்காது என்பது போக்குவரத்து துறை அதிகாரிகளின் தகவலாக உள்ளது.


