திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை நீண்ட நேரம் செல்பி எடுக்க முயன்றதால் 2 பேரை தாக்கியுள்ளதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு இன்று பிற்பகலில் உணவு கொடுக்க முயன்ற சிசுபாலன் என்பவரையும், யானை பாகன் உதயகுமாரையும் யானை தூக்கிவீசி காலால் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் காரணமாக திருச்செந்தூர் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் யானை தெய்வானையை மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், வனச்சரக அலுவலர் கவின் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேசிய மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அமைதியானது என்றும், பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது என்பதால் தெய்வானை ஏன் இப்படி நடந்து கொண்டது என தெரியவில்லை என்று கூறினார். யானை தாக்கி இருவர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் கூறினார்.
இதனிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிசுபாலன் யானையிடம் செல்பி எடுக்க முயன்றதால் தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும் நடைபெற்ற விசாரணையில் பாகனின் உறவினரான சிசுபாலன் யானை அருகே நீண்ட நேரம் நின்று செல்பி எடுக்க முயற்சித்துள்ளார் . இதில் ஆத்திரமடைந்த தெய்வானை சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது. மேலும் அவரை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் தாக்கியதாக வனச்சரகர் கவின் தெரிவித்துள்ளார்.