நில அபகரிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அரசாணை ரத்து என்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். புதிய தனி திருத்த சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக முன்னாள் திமுக எம்பியும், தற்போது திமுக மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக இருக்கும் தாமரைச்செல்வன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நில அபகரிப்பு தொடர்பாக ஜெயலலிதா அரசு பிறப்பித்த அரசு ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது . அப்போதைய அதிமுக அரசு இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தது .
இது தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது நிலையில், விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஈரோடு முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அன்று , வழக்கில் தீர்ப்பை தேர்வு குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளனர். நில அபகரிப்பு தொடர்பான வழக்கு விவகாரத்தில் அதிமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். சிறப்பு நீதிமன்றங்களில் இருந்த வழக்குகளை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினையும் ரத்து செய்தனர் .
தமிழகத்தில் இருக்கும் நிலப்பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக புதிய தனி திருத்த சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இந்த உத்தரவினால் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அரசு கொண்டு வந்த அரசாணையினை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தீர்ப்பு சரியே என்பது உறுதியாகி இருக்கிறது.