அரசாங்கத்தால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது, மக்களின் மனங்களும் மாற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் கூறி இருக்கிறார்.
![]()

சென்னையில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் நுரையீரல் பாதுகாப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்த முக்கியக் கருத்துகள் வருமாறு:
தனிமனித மனமாற்றமே தீர்வு:
“போதை ஒழிப்பு குறித்து அரசு மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளைத் தாண்டி தனிமனிதனின் மனநிலை மாற வேண்டும். அதே போல சமூக அமைப்புகளின் பங்களிப்பும் இவ்விவகாரத்தில் மிகவும் அவசியம். மக்கள் மத்தியில் போதை பொருள் பயன்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சமூக அவலங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.”
குற்றங்களுக்குக் காரணமாகும் போதை:
“இன்று சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றச்சம்பவங்களுக்கு போதை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, குறிப்பாக இளம் தலைமுறையினருக்குச் சிறு வயதிலிருந்தே நற்பழக்கங்களைக் கற்றுக்கொடுத்து, போதையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க சமூக அமைப்புகள் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்களின் உதவி மிக முக்கியமானது” என்று காதர் மொய்தீன் தனது பேட்டியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
