திடீர் ரெய்டு, 10 மணிநேரம் அடைத்துவைத்து சித்ரவதை- மு.க.ஸ்டாலின் கண்டனம்
அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த போது அதை அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சித்தீர்கள். ஆனால் நீங்களே ஒருகாலத்தில் வழக்குகளில் சிக்கிய அ.தி.மு.க. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இது ஒரு முரண்பாடான நிலைபாடு என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன? என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டிக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இத்தகைய கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வைப்பது என்பது அரசியல் நடவடிக்கை. ஆனால் ஆளுநர் அரசியல்வாதியாக மாறக் கூடாது. அவர் அரசியல் சட்டபடிதானே நடக்க வேண்டும். அப்படி அவர் நடக்காததுதான் எங்களது சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கிறது. செந்தில் பாலாஜியை பா.ஜ.க. குறிவைப்பதைப் போலவே ஆளுநரும் செயல்படுகிறார். அதனைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

செந்தில் பாலாஜியின் கைதே சட்டவிரோதமானது என்று அவரது மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். அமலாக்கத்துறையை அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜ.க. பயன்படுத்துகிறது என்பது எங்களது பகிரங்க குற்றச்சாட்டு. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உள்ளான அ.தி.மு.க. அமைச்சர்களை அவர்கள் ஆட்சியில் இருந்த போதும் கைது செய்யவில்லை; ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கியெறிந்த பிறகும் கைது செய்யவில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செந்தில்பாலாஜியை வருமானவரித் துறை ரெய்டு செய்கிறது, அமலாக்கத்துறை மனிதநேயமின்றி கைது செய்கிறது. நேர்மையாக செயல்பட வேண்டிய அந்த அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.
9 ஆண்டுக்கு முந்தைய ஒரு புகாருக்காக – திடீரென்று ரெய்டு நடத்தி – 18 மணி நேரம் அடைத்து வைத்து – சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர் அமைச்சராக இருப்பவர். பகிரங்கமாக வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தவர் தானே. அப்படி இருக்கும் போது அடைத்து வைத்து ஒரே நாளில் வாக்குமூலம் வாங்க வேண்டிய அவரசம் எங்கே வந்தது?

இதயத்தில் நான்கு அடைப்பு இருக்கிறது, அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அது “நாடகம்” என இதயத்தில் ஈரமில்லாமல் வாதிடுகிறது அமலாக்கத்துறை. முதலில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துமனை மருத்துவர்கள் கூறியதை நம்ப மறுத்தது. பிறகு தனியார் மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, அமலாக்கத்துறையின் இந்த மனித நேயமற்ற செயலையும், “செலக்ட்டிவ்” கைதையும்தான் அதிகார துஷ்பிரயோகம் என்கிறோம். எதிர்க்கிறோம்.
எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களது நிலைப்பாடு. மருத்துவமனையில் இருப்பதால் துறை இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். அவ்வளவுதான்! மற்றபடி நேர்மையான- சட்டத்திற்குட்பட்ட விசாரணையை நாங்கள் எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. சட்டப்படியே சந்தித்து வெற்றி கண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


