காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 270 ஆக உயர்ந்துள்ளது.


மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 4,000 போலீசார்: மழை வெள்ளத்தால் தலைநகர் காத்மாண்டு உட்பட பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வெள்ள நீர் ஆறு போலப் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள நாட்டின் காவல் துறையைச் சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மற்றும் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.
முடங்கிய இயல்பு வாழ்க்கை: நிலச்சரிவு காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், தொலைதூர கிராமங்களுக்கான தொடர்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகமும் பல இடங்களில் தடைபட்டுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கிறது!” – நேபாள வெள்ளப் பேரழிவிற்கு CSK உருக்கமான பதிவு!
