spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிருப்பரங்குன்றம் மலை: யாரும் அறியா வரலாறு!

திருப்பரங்குன்றம் மலை: யாரும் அறியா வரலாறு!

-

- Advertisement -

நாட்டில் வளர்ச்சி குறித்து பேச எதுவும் இல்லாததால் பாஜக மதவாத அரசியல் செய்வதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் குற்றம்சாட்டியுள்ளார்.

lajapathi roy

we-r-hiring

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் மலை விவகாரம் குறித்து வழக்கறிஞர் லஜபதிராய், யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- மதுரையில் மிக முக்கியமான குகை தளங்கள் உள்ளன. அதில் கிறிஸ்த்து பிறப்புக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அந்த குகைத்தலங்கள் எல்லாம் சமணர் தலங்கள் ஆகும். இது தொடர்பாக எண்பெரும் குன்றம் என்னும் நூலை வேதாச்சலம் ஐயா எழுதியுள்ளார். அந்த நூலில் திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள பழமையான இடம் சமணர் கோவில்தான். சமண தீர்த்தங்கரர்களின் அடையாளம் அசோக மரம் ஆகும். தென்பரங்குன்றத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலைக்கு மேலே அசோக மரத்தின் இலைகள் சுருள் சுருளாக இருக்கும் என்றும் வேதாச்சலம் தனது நூலில் எழுதியுள்ளார். 8ஆம் நூற்றாண்டில் ஏற்கனவே இருந்த சமண தீர்த்தங்கரரின் சிலையை உடைத்து, அர்த்தநாரீஸ்வரர் சிலை அமைத்துள்ளனர். ஆனால் அசோக மர இலையை அவர்கள் அகற்ற விரும்பவில்லை. திருப்பரங்குன்றம் மலையை பொருத்தவரை இந்து கோவில் அமைவதற்கு முன்பாகவே அங்கே சமணர் கோவில் உள்ளது. நீங்கள் மலை மீது ஏறி சென்றால் உச்சிக்கு சற்று கீழே பார்சுவநாதர் புடைப்பு சிற்பம் இடம்பெற்றிருக்கும். அதற்கு மேலே சிக்கந்தர் தர்கா என்ற மசூதியும், தர்காவும் இணைந்த பகுதி இருக்கும்.

மதுரையை வரலாற்றை பொருத்தவரை ஜேம்ஸ் ஹெச். நெல்சன் என்ற ஆங்கிலேயர் எழுதிய மதுரை மேனுவல் நூல் மிக முக்கியமானது. அதில் அவர் முக்கியமான விஷயத்தை சொல்லி இருப்பார். 500 அடி உயரமுள்ள இந்த ஸ்கந்த மலையில் ஒரு இஸ்லாமிய துறவி வாழ்ந்தார் என்றும், அது ஒரு முக்கியமான தலமாக விளங்கியதாகவும், அங்கு மசூதி இருந்ததாகவும் அவர் 1868-ல் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் 1914ல் எஸ்.சி.ஹில் என்ற வரலாற்று அறிஞர் நூல் எழுதியுள்ளார். யூசுஃப் கான் – தி ரெபெல் கமாண்டென்ட் என்ற புகழ்பெற்ற அந்த நூலில் சுவார்ட்ஸ் பாதிரியாரின் குறிப்பை சொல்கிறார். அந்த குறிப்பில், சிக்கந்தர் மலை மீது அமைந்துள்ள மசூதியை யூசுப்கான் கட்டியதாக தெரிவித்திருந்தார். இந்த இடத்திற்கு இந்துக்கள் – இஸ்லாமியர்கள் சேர்ந்தே செல்வார்கள் என்றும் அவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. யூசுப் கானால் கட்டப்பட்டது என்றால், அவர் 1764ல் மதுரை சம்மட்டிபுரத்தில் தூக்கில் போட்டார். அப்படி என்றால் சிக்கந்தர் மலை மீது உள்ள மசூதி அதற்கு முன்பாக கட்டப்பட்டதாக தான் இருக்கும். யூசுப் கான், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னராக மதுரையில் இருந்தார். மதுரை கவர்னராகவும் இருந்தார். பின்னர் நவாப் ஆட்சிக்கு எதிராக திரும்புகிறார். இந்த சண்டையில் யூசுப் கான் கொல்லப்படுகிறார். அவர் இறந்த ஆண்டை கணக்கில் கொண்டாலும் 275 ஆண்டுகள் பழமையான மசூதியாகும் அது.

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக நீதிமன்றத்தில் 2 முக்கிய  வழக்குகள் வந்தன. முதலாவது வழக்கில் மதுரை சார்பு நீதிமன்றத்தால் 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகவும் முக்கியமானது. மதுரை கூடுதல் சார்பு நீதிபதியாக இருந்த ராம அய்யர் என்பவர் இந்த தீர்ப்பை வழங்கினார். அவரது தீர்ப்பில் மசூதியும், கொடி மரம் அமைந்துள்ள இடம் இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 1931 மன்னர் மன்ற தீர்ப்பில் திருப்பரங்குன்றத்தில் ஆக்கிரமிப்பில் இல்லாத இடம்தான் கோவிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது. எழுத்தாளர் அருந்ததி ராய் சொல்கிறார், நீங்கள் எந்த மசூதியை தோண்டினாலும் கீழே இந்து கோவில் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் இன்னும் கொஞ்சம் தோண்டினால் கீழே புத்தர் கோவில் இருக்கும், அதற்கும் கீழே தோண்டினால் சமணர் கோவில் இருக்கும், அதற்கும் கீழே சென்றால் அங்கு பூர்விககுடிகளின் வழிபாட்டுத் தலங்கள் கட்டாயம் இருக்கும். வரலாறு என்பதை நாம் ஒரு குறிப்பிட்ட காலத்துடன் நிறுத்த முடியாது. திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்திலேயே, சமணர்கள் உரிமை கோரவும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா சமணர் குகைகளும் திகம்பர சமணர்களுக்கு சொந்தமானவை ஆகும். அவர்கள் இந்த கோவிலுக்கு உரிமை கோரினால் என்ன ஆகும்.

மதுரை பாண்டி கோவிலில் உள்ள பாண்டி முனீஸ்வரர் சிலை என்பது புத்தரின் சிலை என்று, மதுரை காமராஜர் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் வெங்கட்ராமன் சொல்கிறார். 1970-களுக்கு முன்பாக பாண்டி முனீஸ்வரர் கோவிலில் உள்ள சிலைக்கு மீசை இல்லை. புத்தர் பிறக்கும்போது அவரது தலையில் ஒரு புடைப்பு இருக்கும். மறைந்த பேராசிரியர் வெங்கட்ராமனுடன், ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் சென்றபோது, அந்த சிலையின் தலை பகுதியை பார்த்துவிட்டு அது புத்தர் என்று அவர் சொல்கிறார். இப்படி அனைத்து இடங்களிலும் ஒரு வரலாற்று ரீதியாக நாம் யோசிக்கும்போது சமண தடயங்கள், பவுத்த அடையாளங்கள் இல்லாமல் இருக்காது. டிஜிபி லெட்சுமி நாராயணனின் மாமனார் ஏ.எஸ்.பி ஐயர், ஒரு ஐசிஎஸ் அதிகாரி ஆவார். அவர் ’25 இயர்ஸ் அஸ் ஏ சிவிலியன்’ என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் நாகை நீலாயதாக்சி, மதுரை மீனாட்சி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆகிய 3 அம்மன் கோவில்களும், ஒரு காலத்தில் புத்தரின் தாயாரின் கோவில்கள் என்று சொல்லியுள்ளார். அவர் ஆதாரத்துடன்தான் அதை சொல்கிறார். நிறைய இடங்களில் பவுத்த தடயங்கள், கொஞ்சம் கொஞ்சமாக இந்து தடயங்களுடன் சேர்ந்து கலந்துவிட்டது. கண்ணகி கோல்விகளே, அம்மன் கோவில்களாக மாறிவிட்டது.

H RAJA
H RAJA

யார் மத வெறி அரசியல் செய்கிறார்களோ, அவர்களுக்கு முன்னேற்ற அரசியல் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. அருணாச்சல பிரதேசத்தில் நிலம் ஆக்கிரமிக்கப் படுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கு போட்டு அனுப்பப்படுகிறார்கள். இதற்கு எல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக நாட்டை காப்பது என்பது நாட்டிற்குள்ளே பகைமையை வளர்ப்பது இல்லை. குன்றம் மீட்போம், புனிதம் காப்போம் என்று சொல்பவர்கள் முதலில் இதனை காக்க வேண்டும். ஆனால் திருப்பரங்குன்றத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ