கொரோனா கட்டுப்பாடு – தமிழகத்தில் மக்கள் முகக்கவசம் அணிய மீண்டும் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படி படியாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது புதியதாக XBB, BA2 வகை தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதனையொட்டி விமான நிலையங்கள், , ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் திரும்பும் பயணிகளுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலசோனை மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்.
மேலும், மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் இருக்கும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தொற்று ஏற்பட்டோர் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இப்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, மக்கள் ஏற்கனவே கடைபிடித்து வந்த கொரோனா முன்னெச்சரிக்கைகளை மீண்டும் கடைபிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு இன்னும் முழுமையாக அகலவில்லை. வெவ்வேறு வகையாக உருவம் பெற்று மீண்டும் மீண்டும் பரவிக் கொண்டே இருக்கிறது.
இதுவரை மூன்று, நான்கு அலைகளை பார்த்துவிட்ட மக்கள், பல்வேறு துயர்களுக்கு ஆளாகினர். குடும்பத்தினரை இழந்தும், தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை இழந்தும் உள்ளனர். அதனால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை.
2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்போது அடுத்த மாறுபாடு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இப்போது முன் அனுபவம் இருப்பதால், மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கையாக இந்த வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள இப்போதே தயாராகிக் கொள்ள வேண்டும்.