படப்பிடிப்பின் போது கொடுத்த வாக்குறுதி — தவெக அமைச்சா் புஸ்ஸி ஆனந்த் தகவல்! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக் கோரிய விவகாரத்தில், தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கை குறித்த சுவாரஸ்யமான பின்னணி தகவலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சா் புஸ்ஸி ஆனந்த் பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம்:
கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் கடந்த ஆண்டு நடிகர் விஜய்யின் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்குச் சென்ற அனுபவம் குறித்துப் பேசிய புஸ்ஸி ஆனந்த் “கடந்த ஆண்டு தாண்டிக்குடி பகுதிக்கு நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காகச் சென்றிருந்தார். அப்போது நானும் அவருடன் சென்றிருந்தேன். அங்கு முறையான சாலை வசதி இல்லாததால், மலைப்பாதையிலிருந்து கீழே இறங்கும்போது சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் கரடுமுரடான பாதையில் விஜய்யும் நடந்தே வந்தார்.

அப்போது, அப்பகுதி மக்களின் சிரமத்தைக் கண்ட அவர், ‘நமது சொந்த செலவிலேயே இந்த மக்களுக்குச் சாலை அமைத்துக் கொடுத்துவிடலாமா?’ என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘இங்கு நமது கட்சியின் பேனர் வைப்பதற்கே அனுமதி தருவதில்லை, இதில் சொந்த செலவில் சாலை அமைக்க விடுவார்களா?’ என்று திரும்பக் கேட்டேன்.”
‘ஆட்சிக்கு வந்த 5-வது நாளே நடவடிக்கை’:
தொடர்ந்து பேசிய அவர், தாண்டிக்குடி மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கை மற்றும் சிரமத்தை நினைவில் வைத்து, தற்போதைய அரசு/நிர்வாகம் சார்பில் அதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தாண்டிக்குடி மக்களின் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்கும் வகையில் உடனடியாகச் சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
