அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை தவிர செந்தில்பாலாஜிக்கு வேறு வழியில்லை. அதேவேளையில் பதவியை ராஜினாமா செய்வதால் அவருக்கு எதிரான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படுமா? என்பது சந்தேகம் தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை தவிர செந்தில் பாலாஜிக்கு வேறு வழியில்லை. அதற்கு காரணம் உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை வரை வாய்தா என்கிற அளவுக்கு போய்விட்டது. அன்றைக்கே உத்தரவு போட்டிருப்பார்கள். ஆனால் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக் கொண்டதால் திங்கட்கிழமை வரை அவகாசம் கொடுத்தனர். அதாவது கவுரவமாக ராஜினாமா செய்துவிடுங்கள் என்று மறைமுகமாக சொல்லியுள்ளனர். தமிழ்நாடு அரசுக்கு இது பின்னடைவுதான். தொடர்ந்து இந்த சர்ச்சை நீடித்துக் கொண்டே போவது நல்லது அல்ல. செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் விடுவிக்க மாட்டார். அவராகவே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளதால், சாட்சியத்தை கலைத்து விடுவார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டுகிறது. செந்தில் பாலாஜிக்கு விரைவாக விசாரணை நடத்த வேண்டிய உரிமையின் அடிப்படையில் தான் ஜாமின் வழங்கப்பட்டது. அவருக்கு எதிராக மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் 1,500 சாட்சிகள் உள்ளனர். 300 முதல் 400 குற்றவாளிகள் உள்ளனர். வழக்கு விசாரணை நடந்து முடிவதற்கு சுமார் 100 ஆண்டுகள் ஆகும். இந்த 3 வழக்குகளையும் ஒன்றாக இணைக்கும் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. அப்போது நடைமுறையில் இந்த வழக்கு முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
செந்தில் பாலாஜி தப்பு செய்துள்ளாரா? செய்ய வில்லையா? என்கிற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. செந்தில்பாலாஜி சட்டத்தின் முன் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர். ஜாமினில் உள்ளார். பிணையில் இருக்கிற போதே அமைச்சராக இருக்கிறார். அப்படி பிணையில் உள்ள போது அமைச்சராக இருந்தவர்கள் பட்டியல் ஏராளமாக உள்ளது. சாட்சியை கலைப்பது அல்லது சாட்சிக்கு விலை பேசுவது என்பது இந்திய நீதிபரிபாலன முறையில் ஒரு அங்கமாகத்தான் உள்ளது. ஒருவர் பிறழ் சாட்சியாக மாறுகிறார் என்றால், விட்னஸ் எவால்யூஷன் செய்வது நீதிபதியின் வேலையாகும். ஒரு வழக்கறிஞராக இதை எப்படி பார்க்கிறேன் என்றால்? இது எப்போதும் உள்ள நிபந்தனை தான். பிணையில் உள்ளவர்கள் அமைச்சராக தொடர்ந்ததும் நாட்டில் நிறைய நடைபெற்றுள்ளது. செந்தில் பாலாஜிக்கு மட்டும் என்ன சிறப்பு?
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம். சட்டத்தின்கீழ் அனைவரும் சமம். சட்டத்தின் பார்வையில் செந்தில் பாலாஜியும், அவரை போல பிணையில் அமைச்சர்களாக உள்ளவர்கள் எல்லாரும் ஒன்றுதான். அப்போது விரைந்து விசாரணை நடத்தும் உரிமை என்பது அனைவருக்கும் ஒன்று தானே. 3 வழக்குகள், 300 குற்றவாளிகள், ஆயிரக்கணக்கான சாட்சி பட்டியல் என்றால்? வழக்கு எப்போது முடியும்?. 3 மாதத்தில் அனைத்து வழக்குகளையும் முடிக்க வேண்டும். அதுவரை செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லுமா? நான் குற்றவாளியாகவே இருந்தாலும், எனக்கு சட்டம் விரைந்து விசாரணை நடத்தும் உரிமையை வழங்கி இருக்கிறது. ஏனென்றால் அந்த உரிமையை நிலைநாட்டி தான் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
தற்போது என்ன செய்கிறார்கள் ஒருவர் மீது வழக்கு போடுகிறார்கள். அது மட்டும் தான் பொதுவெளியில் உள்ளது. ஆனால் அவர் அரசியல்வாதி. நூறு வருடங்கள் கழித்து தீர்ப்பு வருகிறபோது அவர் என்ன ஆவார்? அவர் விடுதலையானாலும் அவ்வளவு தான் அவரது வாழ்க்கையே அஸ்தமித்து போய்விடும். இதில் சட்டப்படி எனக்கு என்ன நிவாரணம் கிடைக்கிறது?. நான் அமைச்சராகக் கூடாது என்று சொல்கிறீர்கள். சரி. ஆனால் 6 மாதத்திற்குள் வழக்குகளை முடிக்க சொல்லுங்கள் என்றால்? அப்படி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? ஏராளமானோர் பிணையில் இருந்துகொண்டு அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு மட்டும் அதில் என்ன விதி விலக்கா? அவர் தவறு இழைத்தவராக இருக்கலாம். திமுக ஆட்சியை ஒழித்துக்கட்டுவது உங்கள் நோக்கமாக இருக்கலாம். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பார்வையில் பாருங்கள். அப்போது உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும்?. சாட்சியை கலைத்தல் என்பது எப்போது தொடங்கும். சம்மன் அனுப்பினால்தான் சாட்சியை கலைப்பது தொடங்கும். அப்படி இருக்கையில் எப்படி சாட்சியை கலைப்பார் என்று சொல்கிறார்கள்.
அமலாக்கத் துறை இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. கிரிமினல் கூட்டுச் சதி என்பது சங்கிலி போன்றது. செந்தில் பாலாஜியின் மீதான குற்றச்சாட்டு என்பது வேலைவாங்கி தருவதாக மோசடி செய்வதாகும். இது 120 பி பிரிவு ஆகும். அதை தவிர்த்து வேறு வழக்கும் பதிவு செய்ய முடியாது. இந்த வழக்கில் 300 குற்றவாளிகள், ஆயிரம் சாட்சிகள் என்றால் குற்றத்தை நிருபிக்கவே முடியாது. அப்போது வழக்கமாக என்ன செய்வார்கள் என்றால், நிறைய சாட்சி பட்டியலை போட்டு விட்டு கடைசியில் அதை சுருக்கிவிடுவார்கள். உண்மையிலேயே ஆயிரம் சாட்சிகளை விசாரிக்க முடியுமா? ரகுபதி மசோதாவை தாக்கல் செய்ததால் செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது யூகமாகும். ராஜினாமா செய்வது என்பது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அப்படி ராஜினாமா செய்வதால், தனக்கு எதிரான வழக்குகள் விரைந்து விசாரிக்க முடியுமா? என செந்தில்பாலாஜி கேட்கலாம். இது அரசியல்.
செந்தில்பாலாஜி வழக்கில், விஜயின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அடிப்படையிலான ஒரு அரசியல் கணக்கு உள்ளது. அது என்ன என்றால் நமது ஆதரவு வாக்குகளை நமக்கு முழுமையாக கொண்டுவருவது. இன்றைக்கு செந்தில்பாலாஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது ஒரு பின்னடைவு தான். ஆனால் அதை எப்படி சாதகமாக மாற்றுவது. இந்த இடத்தில்தான் நீதிமன்றம் ஒரு அரசியல் களமாக மாறுகிறது. சட்டம் ஒரு இருட்டறை. வழக்கறிஞரின் வாதம் விளக்கு. மூன்று அல்லது நான்கு பெரிய வழக்கறிஞர்கள் சேர்ந்து 4 பெரிய விளக்குகளை ஏற்றினால் எவ்வளவு வெளிச்சமாக இருக்கும். அதை நோக்கிதான் இது போகிறது.
திமுகவின் 2006-2011 வரையிலான ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது செய்த தவறுகள் தொடர்பாக 2011 – 2021 வரை 10 ஆண்டுகள் விசாரணையில் இருந்தது. அதில் சிலர் விடுக்கப்பட்ட நிலையில், அவர்களை விடுவித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து தீர்ப்பு வழங்குகிறது. அதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே 3 சூமோட்டோ வழக்குகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி தான் வைத்துள்ளது. தற்போது இந்த வழக்குகளுக்கும் உச்ச நீதிமன்றத்தில் அதே கதிதான் ஏற்படும். அதனால் அது தேர்தல் களத்தில் பின்னடைவாக மாறாது. திமுக ஆட்சிக்கு இருக்கும் உண்மையான பின்னடைவு என்ன என்றால் ஆட்சி மீது இருக்கும் அவப்பெயர் மற்றும் கட்சியினர் மத்தியில் இருக்கும் அதிருப்தியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.