நடிகர் ராஜேஷின் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகர் ராஜேஷ். இவர் தமிழில் மட்டுமே கிட்டத்தட்ட 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இவர் இன்று (மே 29) மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில் ராஜேஷின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.#ActorRajesh
— Rajinikanth (@rajinikanth) May 29, 2025
அந்த பதிவில், “என்னுடைய நெருங்கிய நண்பர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த மன வேதனையை தருகிறது. அருமையான மனிதர். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ராஜேஷ், ரஜினியுடன் இணைந்து தாய் வீடு, தனிக்காட்டு ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.