எந்த காலத்திலும் திமுகவின் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது – கனிமொழி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுகள் குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தவித வருத்தமும், விளக்கமும் அளிக்காததை கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, “ஆளுநர், பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டம் தொடர் போராட்டமாக மாறும். இது டெல்லியையும் முற்றுகையிடும். ஆளுநர் என்பது அலங்கார பதவி என்றார் அம்பேத்கர். சுருக்கெழுத்துக்கே இவ்வளவு இருந்தால் செம்மொழிக்கு எவ்வளவு இருக்கும்.மசோதாவை ரத்து செய்வதற்கும் கிடப்பில் போட வைப்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர் தான் ஆளுநராக இருக்கிறார்.
நமது தலைவர்களின் பெயரை படிப்பதையே குற்றம் என எண்ணி படிக்காமல் இருந்த ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் 50 பேரை பலி வாங்கியுள்ளார். இங்கு ஆட்சியை கலைக்க முடியாது. இல்லாவிட்டால் பொய் வழக்கு பதிவார்கள். இல்லையெனில் எந்த அமைச்சரையாவது ஆளுநரால் நீக்க முடியுமா? ஆளுநரின் அதிகாரம் என்ன என்றே தெரியாமல் பேசி வருகின்றனர். அரசமைப்புக்கு எதிராக பேசும் ஆளுநரை மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கிறது.

ஆளுநரின் நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் பதவி வேண்டாம் என்பதற்காகவே திமுக தொடர்ந்து போராடி வருகிறது. மக்களுக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை மக்களுக்கு துரோகம் செய்யும் ஆளுநருக்கு கொடுத்தால் அவர்கள் கணக்கு தர மறுக்கின்றனர். இதற்கெல்லாம் கை கட்டி ஆளுநர்கள் பதிலளிக்க வேண்டிய நேரத்தில் இந்த வேலையெல்லாம் தேவையா? தொடர்ந்து நம்மை கொச்சைப்படுத்துகிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தான் நீதி கிடைத்தது. ஆனால் இங்கு ஆளுநராக இருந்து கொண்டு அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்.
ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே கால் வைக்க முடியாது. யாரிடம் பணம் வாங்கி கொண்டு இப்படி ஆளுநர் பேசுகிறீர்கள்.யாருக்கு யார் கைக்கூலி என்பது தெள்ளத்தெளிவாக காட்டும். தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டும். மு.க.ஸ்டாலின் வழிகாட்ட தொடங்கி உள்ளார்கள். அணியாக மாற்ற தொடங்கி உள்ளார். அந்த அணி டெல்லி நோக்கி வரும். ஆட்சியை மாற்றி காட்டுவோம்” என சூளுரைத்தார்.


