சூர்யா 46 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா ‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், அனில் கபூர் ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை (செப்டம்பர் 6) ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.