மது குடிக்க பணம் தராத தாயை மகன் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மணிகண்டன்- ஜோதி தம்பதியரின் மகன் மருதுபாண்டி.(வயது 23). கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான மருதுபாண்டி அவ்வப்பொழுது வீட்டில் தாய் தந்தையரிடம் பணம் இல்லாத போது பணம் கேட்டு தொந்தரவு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலையும் பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில் இன்றும் வீட்டில் இருந்த தாய் ஜோதிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

ஆனால் தாய் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி வீட்டில் இருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு தலையில் பலமாக தாக்கியதால் தாய் ஜோதி ரத்த வெள்ளத்தில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் அறிந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தலையில் கோடாரியாள் வெட்டியதில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அதிக ரத்தப் போக்கின் காரணமாக ஜோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மது போதைக்கு அடிமையான மகன் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மருதுபாண்டியை தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.