கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
கத்தார் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், அவர்களின் உடல்களை விரைந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு, கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியில் இருந்த மூன்று தமிழர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள்:
- பவித் (26) – சிதம்பராபுரம் யாக்கோபுரம், ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி.
- சஜித்குமார் (25) – சிவகாமிபுரம், பணகுடி, திருநெல்வேலி.
- சுவின் (24) – அழகியநம்பியாபுரம், திருநெல்வேலி.
இந்த துயரச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு நேரடியாக கண்காணித்து துரிதப்படுத்துமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
இந்தியாவிற்குள் (கட்டணமில்லா எண்): +91 1800 309 3793
வெளிநாட்டில் இருந்து தொடர்புகொள்ள: +91 80 6900 9900, +91 80 6900 9901
