தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளிகள் இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக பொருந்தாது என்றும், கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகைகளில் வெளியிடுமாறு உத்தரவிடுவது பள்ளிகளின் நிர்வாக சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் வாதிட்டனர்.

மேலும், கட்டண விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவு சட்டரீதியான அடிப்படை இல்லாதது என்றும், தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மாநில தகவல் ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆஜரான தரப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது. தகவல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே தனியார் பள்ளிகள் இயக்குநரகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பு, தனியார் பள்ளிகளின் நிர்வாக உரிமைகள் மற்றும் பெற்றோர்களின் தகவல் அறியும் உரிமை ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையை தீர்மானிக்கும் முக்கிய வழக்காக பார்க்கப்படுகிறது.
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
