இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை விரும்பாத சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம் என ”நீளிரா” படம் குறித்து நடிகர் சூர்யா வெகுவாக பாராட்டியுள்ளாா்.
சோமிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நீளிரா. நீண்ட இரவு என்ற பொருள் கொண்ட இந்த படம் இலங்கையில் போர் சூழல் மத்தியில் ஒரு திருமண வீட்டு குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரங்களை பற்றி பேசுகிறது. நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், சிது குமரேசன், கபிலா வேணு ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு, கே இசை அமைத்துள்ளார். விமர்சனகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் ராணா தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா வெகுவாக பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ராணா இணைந்து நீளிரா படத்தை தயாரித்துள்ளனர். இப்போது சமகால போரினால் நமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதில் மிகவும் பாதிக்கப்படுவது சாதாரண, எளிய மக்கள்தான். ஒரு போர் சூழலில் ஒரு திருமணம் நடக்கிறது.. அந்த இரவில் எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரு எமோஷனல் த்ரில்லராக இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. அந்த இரவை உணர்ந்தவர் அந்த இரவை கடந்தவரே இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த கால போர், இப்போது இருக்கும் போர் இது எல்லாவற்றிற்கும் இந்த படம் ஒரு மௌன சாட்சியாக நிலைத்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இது போரை விரும்பாதவர்களுக்கான படம்.. தமிழ் சினிமாவில் நிறைய திருமண காட்சிகள் பார்த்திருப்போம். ஆனால் இது ரொம்ப ரொம்ப புதுசு.. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளாா்.
“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…
