Homeசெய்திகள்கட்டுரை"அரசியல் வியாபாரிகளால் இயங்கும் ஆட்சி": த.வெ.க அரசு மீது அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கடுமையான...

“அரசியல் வியாபாரிகளால் இயங்கும் ஆட்சி”: த.வெ.க அரசு மீது அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கடுமையான விமர்சனம்!

-

- Advertisement -

தமிழகத்தில் அமைந்துள்ள த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையிலான புதிய அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழகத்தின் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து ‘தமிழ் நிறம்’ யூடியூப் தள நேர்காணலில் அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பல்வேறு காரசாரமான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

டாக்டர் காந்தராஜ்

we-r-hiring

கொள்கையற்ற ஆட்சி – கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்க மறுப்பு:

நேர்காணலில் பேசிய டாக்டர் காந்தராஜ், “ஆரம்பத்தில் கொள்கை எதிரி, லட்சிய எதிரி என்று பேசியவர்கள், தற்போது எந்தவொரு தெளிவான கொள்கையுமின்றி எழுதித் தந்த அறிக்கைகளையே படித்து வருகின்றனர். கரூர் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்குக் கூட அரசும் த.வெ.க நிர்வாகிகளும் பொறுப்பேற்காமல், காவல் துறையின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

கூட்டணிக்குள் வெடித்த குதிரை பேர புகார்கள்:

த.வெ.க கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளிடையே கூட ஒரே மாதிரியான கருத்து நிலவவில்லை என்றும், இடதுசாரிகள் தரப்பிலேயே “வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் குதிரை பேரம் நடக்கிறது” என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், “நடந்து முடிந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 108 இடங்களில் மட்டுமே த.வெ.க வெற்றி பெற முடிந்தது; 126 தொகுதிகளில் மக்கள் நிராகரித்து விட்டனர். இதனால் ஆட்சியைத் தக்க வைக்கவே ‘சுழற்சி முறையில் பதவி’ போன்ற வாக்குறுதிகளைக் கூறி அரசியல் வியாபாரிகள் மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது” என சாடினார்.

அதிமுக பின்னடைவும், மத்திய பாஜகவின் நிழலும்:

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், அவரது அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகளும் எம்.எல்.ஏ-க்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அமலாக்கத்துறை (ED) நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவுமே த.வெ.க பக்கம் வந்து இணைந்துள்ளனர் என்று காந்தராஜ் கூறினார். அத்துடன், “தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆதிக்கத்தை வீழ்த்த மத்திய பா.ஜ.க தலைமை எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் என இருவரையுமே பின்னணியில் இருந்து இயக்கி வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சி கவிழும் என கணிப்பு:

இடைத்தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும், நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அரசின் ஸ்திரமற்ற தன்மையைக் காட்டுவதாகத் தெரிவித்த அவர், இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த ஆட்சி கவிழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதாகத் தன் அரசியல் கணிப்பை வெளிப்படுத்தினார்.

MUST READ