நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீதான ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் மற்றும் திரளான இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.


கல்விக்காக மாணவர்கள் உயிர்விடுவது பேரவலம்: ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்ததாவது, “நான் இங்கு உரை நிகழ்த்த வரவில்லை; எனது ஆதங்கத்தையும் உணர்வையும் பகிர்ந்து கொள்ளவே வந்துள்ளேன். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதலே நாம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக எதிர்த்தபோதிலும், ஒன்றிய அரசு அசைந்து கொடுக்காமல் பிடிவாதமாக உள்ளது. கல்விக்காக ஒரு மாணவனோ அல்லது மாணவியோ உயிரை மாய்த்துக் கொள்வதை விட வேறு பெரிய அவலம் இருக்க முடியாது.
நீட் தேர்வு முற்றிலும் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு முன்னதாகப் படித்த மருத்துவர்களின் திறமையை நம்பிதான் இன்றைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தமிழகத்தை தேடி வருகின்றனர். கோடிக்கணக்கான மாணவர்கள் எழுதும் ஒரு நுழைவுத் தேர்வில் இத்தனை குளறுபடிகள் நடந்த பிறகும், அதற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகாமல் இருப்பது அடிப்படை அறமற்ற செயலாகும்.” அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இது நம் அனைவரது உரிமைச் சார்ந்த பிரச்சினை என்பதால், இளைஞர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
