கட்டுரை

“ஸ்கிரிப்ட் இல்லாட்டி வாயே திறக்க மாட்டீங்களா விஜய் சார்?” – தவெக ஆட்சியை விளாசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

Published by
N K Moorthi
Share

“மாற்றம் தருவோம் என்று கூறிவிட்டு ஏமாற்றத்தையாவது தராமல் தவெக அரசு புதிய ஆட்சியை நடத்துமா?” என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைவர்களில் ஒருவருமான ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையான வார்த்தைகளால் ஆளும் அரசை விளாசித் தள்ளியுள்ளார்.

சட்டமன்றத்தில் தவெக அமைச்சர்களின் தொடர் உளறல்கள் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் மவுனம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை அரசியல் அரங்கில் பெரும் தீப்பற்றியுள்ளது.

துறை மாறிப் பேசும் அமைச்சர்கள்: சும்மா நச்சுனு கேள்வி!

“கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ஆடத் தெரியாதவர் அரங்கு கோணல் என்றாராம்; அதேபோல, மாற்றத்தைத் தருவோம் என தவெக கட்சி கூச்சலிட்டது. ஆனால், முதல்வர் விஜய்யின் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ, சட்டமன்றத்தில் துறை மாறிப் பேசும் புதிய ‘நாடக மாற்றம்’ அரங்கேறி வருகிறது” என்று ஆர்.பி. உதயகுமார் கிண்டல் அடித்துள்ளார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் பிரச்சினைகளுக்கு ஆளும் தவெக அமைச்சர்கள் அடிக்கும் லூட்டிகளை அவர் நாளிதழ் பாணியில் அம்பலப்படுத்தியுள்ள விவரங்கள் பின்வருமாறு:

  • விவசாயத் துறை விவகாரங்கள்:

    • நெல் சேமிப்புக் கிடங்கு பற்றி வரி வரியாகப் பேசுவது விவசாயத் துறை அமைச்சரா? இல்லை, அவர்தான் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.

    • கரும்பு சாகுபடி பற்றிப் பேசுவது விவசாயத் துறை அமைச்சரா? இல்லை, அவர்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

    • நெல் மானியம் பற்றிப் பேசுவது உணவுத் துறை அமைச்சரா? இல்லை, அவர்தான் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

  • நிதிக் கணக்கீடுகள்:

    • கடன் நிலைமை பற்றித் தெளிவாகப் பேசுவது நிதி அமைச்சரா? இல்லை, அவர்தான் மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ்.

  • பட்ஜெட் தாக்கல்:

    • சட்டமன்றத்தில் ‘12,400’ என்பதை ’12 ஆயிரத்தி 4000′ என்று தட்டுத்தடுமாறிப் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், ஜாம்பவான்கள் அமர்ந்திருந்த நிதித்துறை அரியாசனத்தில் அமர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்து புள்ளிவிவரக் கணக்குகளைக் கொட்டியுள்ளார்.

  • அனைத்துத் துறைக்கும் பதிலளிப்பவரா முதல்வர்?

    • அனைத்து சப்ஜெக்ட்டுக்கும் டக்கு டக்குனு எழுந்து நின்று கம்பீரமாகப் பேசுவது முதலமைச்சரா? இல்லை, அவர்தான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.

  • மிரட்டல் பேச்சு:

    • எதிர்க்கட்சிகளே இருக்க மாட்டார்கள், நாங்கள் மட்டும்தான் இருப்போம் என்று மிரட்டலாகப் பேசுவது பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரா? இல்லை, அவர்தான் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார்.

“இதுக்கு எதற்கு விஜய், எடப்பாடியாரே முதலமைச்சராக இருந்திருக்கலாமே!”

எந்தக் கேள்விக்கும் பதிலே சொல்லாமல் கோட் சூட் அணிந்துகொண்டு அமைதியாகச் சிரித்துக்கொண்டே அமர்ந்திருக்கும் முதலமைச்சர் விஜய்யை வத்கி எடுத்துள்ள ஆர்.பி. உதயகுமார், “தமிழர்களின் ஜீவாதார உரிமைகள், பாரம்பரியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை எழுதிக் கொடுத்தால் மட்டுமே உங்களால் பேச முடியும். ஸ்கிரிப்டை வைத்து வசனம் பேசி சட்டமன்றத்திற்கு வந்துவிட்டீர்கள்!” என்று ஆவேசப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

“ஸ்கிரிப்டை வைத்துப் பேசினால் மற்றவர்களுக்கு ‘ஸ்பீச்’, விஜய்க்கு ‘ரிச்’ என்று ரீல்ஸ் போடலாம். ஆனால், சப்ஜெக்ட் பேசச் சொன்னால் என்ன செய்வது? சட்டியில்தான் அகப்பையில் வரும், இல்லாத கொடுமை என்னவென்றால், தெரிஞ்சாத்தானே சொல்ல முடியும்? முதலமைச்சர் அரியாசனத்தில் அமர்வதற்கே விஜய்க்கு குற்ற உணர்வு இருப்பதால் கூனிக்குறுகி அமர்வதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.”

“காலம் இதற்கான சரியான பதிலைத் தரும்!”

“தினமும் ஒரு தீர்மானம், தினமும் ஒரு நாடகம் எனச் சட்டமன்றத்தில் அரங்கேறி வருகிறது. தமிழக மக்களுக்கு பட்ஜெட்டில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏதாவது கிடைத்திருந்தால் அது அம்மா ஆட்சியின் திட்டங்கள், இல்லையெனில் எடப்பாடியார் ஆட்சியின் திட்டங்கள்தான்.

இதற்கு எதற்கு விஜய், எடப்பாடியாரே முதலமைச்சராக இருந்திருக்கலாமே எனத் தமிழக மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். காலம் இதற்கான சரியான பதிலைத் தரும்!” என்று ஆர்.பி. உதயகுமார் தன் அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

Show comments
Published by
N K Moorthi
Tags: RB Udhayakumar TVK Government ஆர்.பி.உதயகுமார் தவெக ஆட்சி விஜய் விமர்சனம்