டீ தூளில் கால்நடைகளின் வரட்டி கலப்படம் செய்யப்படுவதாக இந்திய தேயிலை வாரியம் எச்சரிக்கை. கலப்படம் இல்லாத தேயிலையை எப்படி கண்டறிவது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.


மனிதர்கள் தண்ணீருக்கு அடுத்தப்படியாக அதிகம் குடிக்கும் பொருளாக டீ உள்ளது.டீ தூளின் பயன்பாடு ,விற்பனையால் இதில் கலப்படம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசின் இந்திய தேயிலை வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தேயிலை கலப்படத்தை எளிய முறையில் மக்கள் அறியும் விழிப்புணர்வு முகாம் சென்னை அண்ணா நகர் பூங்காவில் நடைபெற்றது.
இதில் இந்திய தேயிலை வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு பூங்காவிற்கு வரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக தேயிலையில் உள்ள கலப்படத்தை எளிய முறையில் கண்டறிய வழிமுறைகளை செயல்முறை விளக்கமாக அதிகாரிகள் அளித்தனர்.

இது குறித்து இந்திய தேயிலை வாரியத்தின் சென்னை பிரிவு பொறுப்பாளர் ஹரிஹரன் பேசுகையில் கலப்படம் இல்லாத தேயிலை ஆரோக்கியமான பானம் என்றும் இதனால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்றும் அதே வேலையில் கலப்பட தேயிலையை பயன்படுத்தும் போது அது கேன்சர்,அஜீரணக்கோளாறு,உடல் உபாதைகளை உண்டு செய்கிறது. இதனால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
மேலும் தேயிலையில் பல்வேறு கலப்படம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விலை மலிவான தர நிர்ணயின குறியீடு இல்லாத தேயிலைப் பாக்கெட்டுகளில் மரத்தூள்,புலியங்கொட்டை,பாதாம் தோல் மாட்டு வரட்டி போன்ற வற்றை கலக்கின்றனர்.இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
