மனித உடலில் வாயு வெளியேறுவது என்பது முற்றிலும் இயல்பான மற்றும் இயற்கையான ஒரு உடல் செயல்பாடு ஆகும். பெரும்பாலான மக்கள் ஒருநாளைக்கு பலமுறை (ஆய்வுகளின்படி 1 முதல் 25 முறை வரை) வாயுவை வெளியேற்றுகின்றனர். எனினும், இந்தச் செயல்பாட்டின் போது சில நேரங்களில் தீவிரமான துர்நாற்றம் வீசுவது பலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்துவதோடு, அதற்கான காரணங்கள் என்னவென்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
துர்நாற்றத்திற்கு உண்மையான காரணம் என்ன?
நாம் வெளியேற்றும் பெரும்பான்மையான வாயுக்களான நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றுக்கு எந்த வாசனையும் இருப்பதில்லை. பிறகு எதனால் இந்தத் துர்நாற்றம் ஏற்படுகிறது?

இதன் முக்கியக் காரணம் நம் குடலில் உள்ள பாக்டீரியாக்கள்தான். நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் அடையும்போது, குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சில வேதிச் சேர்மங்களை உருவாக்குகின்றன. குறிப்பாக, ஹைட்ரஜன் சல்பைட் (Hydrogen Sulphide) போன்ற கந்தகச் சேர்மங்களே இந்தத் துர்நாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன. சரியாகச் சொன்னால், அழுகிய முட்டை வெளிப்படுத்தும் வாசனையும் இதே கந்தகச் சேர்மத்தினால்தான் ஏற்படுகிறது.
சில குறிப்பிட்ட உணவுகளில் இந்தச் சேர்மங்கள் இயற்கையாகவே அதிகம் உள்ளன. எடுத்துக்காட்டாக, முட்டை, இறைச்சி, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது, செரிமானத்தின் போது அதிகப்படியான கந்தகச் சேர்மங்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசும் வாயுவை உருவாக்குகிறது.

வாழ்க்கை முறை மற்றும் உண்ணும் விதம்
இது தவிர, நாம் உண்ணும் விதம் மற்றும் வாழ்க்கை முறையும் இதற்குக் காரணமாகலாம். உணவு உண்ணும்போதோ அல்லது திரவப் பொருட்களைப் பருகும்போதோ நாம் அறியாமலேயே சிறிதளவு காற்றைச் சேர்த்து விழுங்குகிறோம்.
வேகமாகச் சாப்பிடுவது
சூயிங்கம் மெல்வது
புகைப்பிடிப்பது
குளிர்பானங்களை அருந்துவது
அதிகப்படியான மன அழுத்தம்
போன்ற காரணங்களால் வயிற்றில் அதிக காற்று சேர்ந்து வாயுத் தொல்லையை அதிகரிக்கக்கூடும்.

தீர்வு என்ன?
இந்தச் சிக்கலில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
உணவை அவசர அவசரமாகச் சாப்பிடாமல் நன்றாக மென்று உண்ண வேண்டும்.
ஒரே வேளையில் அதிக உணவை உட்கொள்வதைத் தவிர்த்து, சிறிய அளவிலான உணவை அடிக்கடி உட்கொள்ளலாம்.
கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
தவறாமல் உடற்பயிற்சி செய்வது செரிமான மண்டலத்தைப் பாதுகாத்து, இந்தத் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.
