தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கும் திலீப், நகைச்சுவை படம் ஒன்றில் நடித்துள்ளார்.
மோலிவுட் என்று அழைக்கப்படும் மலையாள திரையுலகில், மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் திலீப். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. நடிகை பாவனா தொடர்பாக எழுந்த பல பிரச்சனைகள், வழக்குகள் அண்மையில் முடிவுக்கு வந்தன. இதன் பிறகு கிட்டதட்ட நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் திலீப் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், திலீப் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பாந்த்ரா. இப்படத்தில் தமன்னா ஜோடியாக நடித்திருப்பார். இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக தங்கமணி என்ற படத்தில் நடித்து வந்தார். கிராமத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை தழுவி இப்படம் உருவாகி உள்ளது.
தற்போது திலீப் நடிக்கும் புதிய திரைப்படம் பவி கேர்டேக்கர். இப்படம் திலீப் நடிக்கும் 149-வது படமாகும். காமெடி கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை கதாபாத்திரத்தில் திலீப் நடிக்கிறார். இப்படத்தை வினீத்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ஃபகத் நடித்த ஆயாள் நானல்ல என்ற படத்தை இயக்கியவர் ஆவார். இந்நிலையில், பவி கேர்டேக்கர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.