ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு
ஏழு மாத கர்ப்பிணி பெண் ரயிலில் விழுந்து பலி விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை ரயிலில் அபாய சங்கிலி இழுத்தும் ரயில் நிக்காததால் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகள் கஸ்தூரி இவருக்கும் சங்கரன்கோவில் அருகே மேல நீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த எட்டு மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகின்றனர்.
சுரேஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி வயது 21 இவர்கள் மற்றும் இவரது உறவினர்கள் உட்பட 11 பேர் நேற்று சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சங்கரன் கோவிலுக்கு கோவில் திருவிழா மற்றும் வளைகாப்பு நடத்துவதற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது விருத்தாசலம் அருகே மாம்பாக்கம் கிராமத்தில் கஸ்தூரிக்கு வாந்தி வருவதாக கூறி படியில் அமர்ந்து வந்துள்ளார்.
அப்பொழுது திடீரென்று கஸ்தூரி, ஏழு மாத கர்ப்பிணி பெண் கீழே விழுந்து ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். அதில் பயணம் செய்த உறவினர்கள் s9 பெட்டியில் அபாய சங்கிலியை இழுத்துள்ளனர். அப்பொழுது அபாய சங்கிலி செயல்படவில்லை. பின்னர் எஸ்8 பெட்டியிலும் அபாய சங்கிலியை இழுத்துள்ளனர். அதிலும் அபாய சங்கிலி செயல்படவில்லை. பின்னர் எஸ் 10 பெட்டியில் அபாய சங்கிலியை இழுத்துள்ளனர். பின்னர் 5 கிலோ மீட்டர் தள்ளி பூவனூர் கிராமத்தில் ரயில் நின்றது.
இதனை அறிந்த விருத்தாச்சலம் இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன கஸ்தூரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். கஸ்தூரிக்கு வருகின்ற ஐந்தாம் தேதி வளையகாப்பு நடைபெற உள்ள நிலையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பெண் தவறி விழுந்த பொழுது பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்தும் ரயில் நிக்காததால் உறவினர்கள் பெரிதும் அவதியில் உள்ளனர். ஐந்து கிலோமீட்டர் தள்ளி ரயில் நின்றதால் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என்று உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.