கேரளா உயர்நீதிமன்றம் முதன்முறையாக தீர்ப்புகளை மலையாளத்தில் வெளியிட்டுள்ளது. இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும், அதற்கான தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.சந்திரசூட் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.


இந்த கருத்துக்கு பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் முயற்சியாக, கேரள உயர் நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை மாநில மொழியான மலையாளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.
அந்த தீர்ப்புகள் கேரள உயர்நீதிமன்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், அதேபோல் தீர்ப்புகளையும் தமிழில் வெளியிட்டால், பொதுமக்கள் பயனடைவார்கள் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கடந்த 2006 ம் ஆண்டே அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதையும் சுட்டி காட்டினார்.


