ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது பேசிய சீமான், “மக்களின் நலம் சார்ந்த வழக்குகள் எவ்வளவு நாள் நிலுவையில் உள்ளது. ஆனால் அரசியல் கட்சிகளின் வழக்குகளை கவனியுங்கள், இரட்டை இலை வழக்கு அவர்களின் பொதுக்குழு வழக்கு என அனைத்தும் உடனுக்குடன் வருகிறது, இது மாதிரி வழக்குகளை மட்டும் உடனே உடேன எடுத்து தீர்ப்பு சொல்வது எப்படி? இது நீதிமன்றமா அல்லது இந்த கட்சிகளின் தலைமை அலுவலகமா? நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லும் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேசுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் அவரைப் பற்றி பேசவில்லை அவர்கள் கட்சியில் உள்ளவர்களை காணவில்லை.
வெளி மாவட்டத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்து இறக்குகிறார்கள், கால் நூற்றாண்டாகவே கவனித்து பாருங்கள். நீதி வழங்கப்படவில்லை, தீர்ப்பு தான் வழங்கப்படுகிறது. காவிரி நதிநீர், கச்சத்தீவு மீட்பு, அணு உலை, மீத்தேன், நீட், குடியுரிமை சட்டம் என அனைத்திற்கும் நீதிமன்றமே செல்ல வேண்டுமென்றால் சட்டமன்றமும் பாராளுமன்றமும் பல்லாங்குழி ஆடுகிறதா? அப்புறம் எதற்கு அது. நாட்டில் ஒரு விவாதமும் இல்லை. வாதம் எதிர்வாதம் அதுதான் ஜனநாயகம்.பாராளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் என எங்கும் வாதம் எதிர்வாதம் இல்லை, வாதம் எதிர்வாதம் பட்டிமன்றத்தில் மட்டும் தான் நடக்கிறது.
காவலர்களை காவலர்களாக நடத்துகிறதா இந்த அரசுகள்?. காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை விட வேண்டும் பலமுறை கோரிக்கை வைத்து விட்டேன். காவலர்கள் தானாக துப்பாக்கி எடுத்து சாவதற்கு அவர்களது மன அழுத்தம் தான் காரணம். காவலர்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே… உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அல்ல, ஒரு டீ சாப்பிட்டால் அவர்களுக்கு கொடுப்பது டிப்ஸ். ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு அவர்களுக்கு டிப்ஸ் கொடுத்தால் அது அன்பளிப்பு. சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்கி கொடுத்தால் அவர்களுக்கு கொடுப்பதும் டிப்ஸ் அன்பளிப்பு. ஆனால் காவல்துறையினருக்கு கொடுத்தால் மட்டும் அதற்கு பெயர் லஞ்சம். அதை ஏன் அன்பளிப்பாக எடுத்துக் கொள்ளவில்லை? அதை அன்பளிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு கடுமையான பணியை அவர்கள் செய்கின்றனர்” எனக் கூறினார்.
