ஓபிஎஸ் தனிகட்சி தொடங்கினால் அவருடன் உள்ள 4 பேரில் 3 பேர் ஓடி விடுவர் என முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் விமர்சித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் இந்த தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் ஜோசப் தோட்டம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள இஸ்லாமியர்களின் வீடுகளுக்கு சென்ற அவர், அவர்களுடன் அமர்ந்து பேசி ஆதரவு திரட்டினார்..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகநாதன், “ஓபிஎஸ் உடன் 4 பேர் மட்டுமே உள்ளனர். தனி கட்சி என்றதும் இன்னும் மூன்று பேர் பிரிந்து சென்று விடுவர். தொண்டர்கள் மற்றும் மக்களின் செல்வாக்கை இழந்து தனியாக வட்டத்திற்குள் அவர் நிற்கிறார். எடப்பாடியை தனி கட்சி ஆரம்பிக்க சொன்னவர் இன்று தனியாக கட்சி ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் மிக சிறந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. பொதுக்குழு செல்லும் என்றால் அதில் நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லும்.
மக்கள், தொண்டர்கள் ஆதரவு இல்லாமல் தனி கட்சி தொடங்கும் நிலை ஓபிஎஸ்க்கு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மூன்றாவது தலைவராக உருவெடுத்துள்ளார். இந்த தோல்வி துரோகிகளுக்கு பழக்கப்பட்ட ஒன்று, அவர்களுக்கு தமிழகத்தில் இனி இடமில்லை” என்றார்.
