டெல்லி உயர் நீதிமன்றம், வீர தீர சூரன் பவிவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கிறார். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா, எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள இந்த படம் இன்று (மார்ச் 27) உலக முழுவதும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் OTT உரிமம் விற்கப்படுவதற்கு முன்பாக ரிலீஸ் தேதியை அறிவித்ததனால் ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது B4U நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த தொடர் விசாரணையில் இந்த படத்தை வெளியிடுவதற்கான தடையை டெல்லி உயர்நீதிமன்றம் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
தற்போது இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ. 2.5 கோடி வழங்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை இன்று மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட அனுமதியும் வழங்கியுள்ளது. எனவே இன்று மாலை 6 மணி முதல் இந்த படம் திரையரங்குகளில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.