தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளில், சுமார் 5.76 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான நேற்றிரவு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும், 2,172 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கூட்ட நெரிசல் இன்றி புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கடந்த 28ஆம் தேதி நேற்று நள்ளிரவு 12 வரையில் மொத்தம் 10 ஆயிரத்து 784 பேருந்துகளில் 5,76,358 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 1,50,510 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.