சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பதற்காக விஜயை பாஜக பயன்படுத்துவதாகவும், அதற்காகவே அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:- நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் மாநிலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவுக்கு எதிராக தான் நான் கட்சி தொடங்கியுள்ளேன் என்று தெரிவித்தார். ஆனாலும், மாநில அரசு, காவல்துறை அந்த மாநாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பையும், பாதுகாப்பையும் வழங்கினர். அதேபோல், சமீபத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் கிராம மக்களை சந்திக்க அனுமதி கோருகிறார். காவல்துறையும் முறையாக அனுமதி வழங்குகிறது; முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தந்தது. தமிழ்நாட்டிலேயே மதவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும், மதத்தின் அடிப்படையில் மாற்று மதத்தினரை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு ஏதாவது பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டால், சமுதாயத்தில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக பாஜக, இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மாநில அரசே பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதை தாண்டி மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு ஏன் என்று கேள்வி எழுகிறது. அந்த அளவுக்கு விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததா? இது தொடர்பாக கமிட்டி எதுவும் பரிந்துரை வழங்கியதா?. ஏனென்றால் திடீரென்று ஒருவருக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடியாது. அப்படி எதுவும் நடைபெற்றதா என்று மத்திய அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இதுபோன்று பார்த்தோம் என்றால் அண்ணாமலை, பாஜகவின் மாநில தலைவர் ஆன கொஞ்ச நாட்களில் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அண்ணாமலைக்கு யாரால் அச்சுறுத்தல் என்று தெரியவில்லை. பொதுவாக போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது என்பது ஃபேஷனாகி விட்டது. அவரவர் வீடுகளில் அவர்களே பெட்ரோல் குண்டுகளை வீசிக்கொள்வது. அதற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது போன்ற செய்திகளை எல்லாம் நாம் பார்த்துள்ளோம். ஒரு முதலமைச்சரருக்கு, எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது புரிந்து கொள்ள முடியும். இதெல்லாம் அவசியம். கட்சி தொடங்குகிறவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவது என்பது மக்கள் மன்றத்தில் கேள்விக்கு உள்ளாகும்.
1989களில் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஜானகி அணி, ஜெ. அணி என 2 அணிகளாக பிரிகிறது. பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கவிழ்கிறது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது. பின்னர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த குற்றச்சாட்டில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. விடுதலைப்புலிகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார் என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு, அப்போது மத்திய அமைச்சராக இருந்த சுப்பிரமணிய சுவாமி பரிந்துரையின் அடிப்படையில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அன்றைய சூழலில் அதிமுக மிகவும் பலவீனப்பட்டிருந்த நிலையில், ஜெயலலிதா பெரிய தலைவராக வளர்ந்திருக்க வில்லை. அன்றைக்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போதுதான் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த அனுதாப அலையில்தான் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஒருவரை பெரிய தலைவராக ஆக்க அந்த காலத்திலேயே பல வேலைகள் நடைபெற்றுள்ளன. அந்த அடிப்படையில் விஜயை ஒரு ஜனரஞ்சக தலைவராக மக்கள் மத்தியில் காட்டுவதற்கான ஒரு முயற்சியா? என்று கேள்வி எழுகிறது. இது மக்களின் வரிப்பணம். ஆண்டிற்கு இதற்கான செலவிற்கு கோடிக்கணக்கில் ஆகலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெறும் நிகழ்ச்சிகளை கவனித்தீர்கள் என்றால், பாஜக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என டிடிவி தினகரன் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஓபிஎஸ்-ம் அதே போன்ற கோரிக்கையை வைக்கிறார். செங்கோட்டையன் திடீரென போர்க்கொடி தூக்குகிறார். மற்றொருபுறம் இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாஜகவுக்கு எப்போதும் உறவாடி கெடுப்பதுதான் வழக்கம். தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு செக் வைக்கும் ஒரு நேரத்தில், விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். திமுகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை கட்டினால் மட்டுமே, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வெல்ல முடியும் என்று முடிவுக்கு வந்து அதற்கான காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனரோ என்று ஐயம் எழுந்துள்ளது.
ஒன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கும் அதிமுக பிரிவுக்கு இரட்டை இலை சின்னத்தை பாஜக கொடுக்கலாம். அல்லது அதிமுக சமரசம் செய்துகொண்டு விஜயை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி விஜயை சேர்த்துக் கொள்ள தயாராக உள்ள அதிமுக அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படும் என்பது போன்ற மிரட்டலும் மத்திய அரசிடம் இருந்து நடக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. விஜய் கட்சி தொடங்கியவுடன் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றார். அதற்கு அடுத்த நாளே சீமான், பெரியாரை கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர் சீமான் எங்கேயும் விஜயை விமர்சிக்கவில்லை. இந்த நிமிடம் வரை சீமான் பெரியாரை விமர்சித்த போதும், விஜய் சீமானை விமர்சிக்கவில்லை. பெரியாரை கொள்கை வழிகாட்டியாக விஜய் ஏற்றுக்கொண்டிருக்கார். பெரியாரின் புகழை சீமான் தொடர்ந்து சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கார். ஆனால் விஜய் கள்ள மவுனம் சாதிக்கிறார். ஏன் என்றால் பெரியாரை பலவீனப்படுத்துகிற டாஸ்க்கை ஆர்எஸ்எஸ் சீமானுக்கு கொடுத்துள்ளது.
விஜய்க்கு பணக்கொழுப்பு என்று சீமான் விமர்சித்ததும், விஜயிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. மாறாக அவரது கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில் திரள்நிதி வாங்கி திண்ணும் சீமான் பேசலாமா? என்று கூறியுள்ளார். அதன் பின்னர் இருதரப்பும் அமைதி ஆகிவிட்டனர். நான் உறுதியாக சொல்கிறேன். டெல்லி மேலிடத்தில் இருந்து சீமானுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்பது பெரியாரின் புகழை சிதைப்பது. பெரியாரை போற்றி பாராட்டுவது போல நடித்து, பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களின் வாக்குகளை திமுகவுக்கு செல்லவிடாமல் பிரிப்பது விஜய்க்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். இது இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் இருவரும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது. பெரியாரை சீமான் எவ்வளவு விமர்சித்தாலும், விஜய் கண்டுகொள்ளக்கூடாது என அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொய் என்றால் விஜய் தரப்பில் இருந்து அதிகாரப் பூர்வமாக ஒரு அறிக்கையாவது வர வேண்டும். தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் தனி மனித தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என்று சொல்கிறீர்கள். பிரசாந்த் கிஷோரை பற்றி சீமான் விமர்சித்தபோது நீங்கள் இவ்வளவு கோபப்படுகிறீர்கள் என்றால் உங்களின் கொள்கை வழிகாட்டி பெரியாரா? அல்லது பிரசாந்த் கிஷோரா?
விஜய்க்கு முதலமைச்சர் பதவியை விடுக்கொடுக்க வலியுறுத்தி அதிமுகவுக்கு, பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று எனக்கு சந்தேகம் எழுகிறது. அதனால் தான் இரட்டை இலை சின்னத்திற்கு செக் வைக்கிறார்கள். கடந்த காலங்களில் பாஜகவுக்கு தேவைப்பட்டபோது எல்லாம் இரட்டை இலை முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் முடக்கினார்கள். பின்னர் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்ததும் சின்னத்தை வழங்கினார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி தனித்து செயல்பட்டதால் முடக்க முயற்சிக்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நாட்கள் எண்ணப்படுகிறது. வெங்கையா நாயுடுவின் குடும்ப திருமண விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த அமித்ஷா, தனது காரில் அண்ணாமலையை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அண்ணாமலையை கடுமையாக எச்சரித்தார் என சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு தடையாக இருப்பதும் அண்ணாமலைதான் என்று சொல்லப்படுகிறது. அண்ணாமலையை நீக்கினால்தான் அதிமுக பாஜக கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி பழனிசாமி நிபந்தனை வைத்தால், அதை பாஜக தலைமை நிச்சயம் ஏற்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.