இந்தியாவில் இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் அனைவரும் பெரியாரால்தான் படித்தவர்கள் என்று பத்திரிகையாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் கரிகாலன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- திரைத்துறையில் பலர் என்னுடைய கதையை திருடிவிட்டார்கள் என்று புகார் அளிப்பதை பார்த்துள்ளோம். ஆனால் மற்ற நபர்களின் வாழ்க்கையில் நடந்த நிஜசம்பவங்களை திருடி, 15 ஆண்டுகளாக சீமான் படம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். முதலில் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் பேட்டி கொடுத்தார். சீமானிடம் பதில் இல்லை. அடுத்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பேட்டி அளித்தார். அதற்கும் சீமானிடம் பதில் இல்லை. பின்னர் புகைப் படக்கலைஞர் அமர்தாஸ் பேட்டி கொடுத்தார். பதில் இல்லை. 8 நிமிடங்கள் தான் சந்திப்பு நடைபெற்றது. அதிலும் பெரிய அளவில் பிரபாகரன் சீமானிடம் எதுவும் பேசவில்லை. ஆமைக்கறி, உடும்புக்கறி, இட்லியை உடைத்தால் கறி என எல்லாமே பொய் என தொடர்ச்சியாக அம்பலமாகி வருகிறது. இதற்கு பதில் அளிக்க முடியாமல் ஒரு கோளையாக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பரோட்டா போட்டுக் கொண்டிருந்த நபரை கூட்டிக்கொண்டு வந்து, இவர் உண்மையிலேயே பார்த்தார் என்கிறார். போலி ஏஜெண்டுகளை கூட்டு வந்து தன்னுடைய ஈழப் பயணத்திற்கு தானே ஒரு சான்றிதழ் கொடுக்கிறார்.
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு அவதுறான தகவல்களை சீமான் பேசி வருகிறார். பாரதியார் ஒரு தமிழ் பாட்டன், அவரை பார்ப்பான் என்று சொன்னது பெரியார். அவருக்கு சாதி வெறி உள்ளது என கூறுகிறார். பாரதியார் யார் என்பதற்கு அவரது பாடல் வரிகளையே சான்றாக கூறலாம். நான்கு வருணங்கள் இல்லை என்றால், இந்த மனித சமூகமே அழிந்துவிடும் என்று தனது பாடலில் அவர் கூறுகிறார். பாரதிக்கு தமிழ் மீது எந்த அளவுக்கு பற்று இருந்தது?. மதுரை தமிழ்ச் சங்கத்தின் மொழி குறித்தான போட்டிக்கு பலரும் வலியுறுத்தி கேட்ட பின்னர்தான் பாரதியார், செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்ற கவிதையை எழுதினார். இதனை குறிப்பிட்டு பாரதிதாசன் ஒரு கவிதையே எழுதியுள்ளார். இதை பெரியார், விமர்சித்தார். பாரதியார் தனது உரைநடையில் என்ன எழுதுகிறார் என்றால், பாஷைகளிலே ஒரு பாஷை உயர்ந்த பாஷையாக இருக்குமானால், அந்த பாஷையை தெய்வ பாஷை என்று சொல்வதில் என்ன தவறு? அப்படி மனிதர்கள் பேசுவதிலேயே உயர்ந்த தேவ பாஷை சமஸ்கிருதம் என்று பாரதியார் சொல்கிறார். இதனை சீமான் ஏற்றுக்கொள்வாரா?
தமிழ்மொழி எப்படி தோன்றியது தெரியுமா? சிவன் இந்த மொழியை ஆதி சிவன் பெற்றெடுத்தார். ஆரிய மைந்தன் அகத்தியனால் இதற்கு இலக்கணம் செய்து தரப்பட்டது என்கிறார். அப்படி என்றால் இந்த மொழிக்கு இலக்கணம் எழுத கூட தமிழருக்கு அறுகதை இல்லை என்று பாரதியார் இழிவுபடுத்தி எழுதியுள்ளார். அந்த பாரதி எப்படி நமக்கு பாட்டனாக இருப்பார்?. பெரியார் என்ன விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றாரா? என சீமான் கேட்கிறார். பாரதியார்தான் உண்மையான விடுதலைப் போராட்ட வீரர் என்கிறார்கள். பாரதியார் விடுதலைப் போராட்டம் குறித்த பல கவிதைகளை பாடியுள்ளார். ஆனால் அப்படி பாடியவர் நடைமுறையில் எப்படி இருந்தார்?. பாரதியார் இந்தியா ஏட்டில் எழுதிய ஒரு கவிதைக்காக அவரை பிரிட்டிஷ் போலீசார் தேடி வருகிறார்கள். பாரதியார் இருக்கிறாரா? என கேட்டவர்களிடம் உள்ளே இருக்கிறார் என சொல்லிவிட்டு பாண்டிச்சேரிக்கு தப்பிச்சென்று விட்டார். அங்கிருந்து பிரிட்டிஷாருக்கு 5 மன்னிப்பு கடிதங்களை எழுதினார். அவர்தான் 1914ல் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலையும் எழுதினார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அரசு 1921ல் வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான அரசாணையை பிறப்பித்தது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பாரதியார், வகுப்புவாரி இடஒதுக்கீடு என்பது சதி, தேச விரோதமானது. இதை கொண்டுவந்த நீதிக்கட்சியினர் தேச விரோதிகள் என்று சொன்னார். இது ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இதுவாக தான் உண்மை.
பெரியார்தான் எங்களை படிக்க வைத்தாரா என சீமான் கேட்கிறார். நம்மைவிட கேரளாவில் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். அதற்கு பெரியாரா காரணம் என கேள்வி எழுப்புகிறார். ஆம் இந்தியா முழுவதும் மக்கள் படித்ததற்கு காரணம் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தான். 1921ல் நீதிக்கட்சி வகுப்புவாரி உரிமை என்ற இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறார்கள். இந்த நீதிக்கட்சி தான் பின்னாளில் திராவிடர் கழகமாக 1944ல் உருவாகிறது. இதன் தலைவராக பெரியார் வருகிறார். 1928ல் நீதிக்கட்சியின் உதவியுடன் நடைபெற்ற சுப்பராயன் தலைமையிலான ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்பில் 100 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. 1947ல் பொறுப்புக்கு வந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார், இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்ற பிரிவை ஏற்படுத்தி 14 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார். இதெல்லாம் சுதந்திரத்திற்கு முன்னர் வெள்ளைக்காரர்களிடம் போராடி நீதிக்கட்சியும், பெரியாரும் நமக்கு வாங்கி தந்தார்கள். ஆனால் இந்த நாடு சுதந்திரம் பெற்ற உடனேயே இதை ரத்து செய்தார்கள்.
அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர், செண்பகம் துரைராஜ் என்ற பெண் மூலம் இடஒதுக்கீட்டால் தனக்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அவருக்கு வழக்கறிஞராக செயல்பட்ட அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 15, பிரிவு 29 (2) ஆகியவற்றில் சொல்லியுள்ள சாதி, மத பாகுபாடு காட்டக்கூடாது என்று கருத்துக்களை முன்வைத்து இடஒதுக்கீட்டை ரத்து செய்தனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது தான், அந்த செண்பகம் துரைராஜ் மருத்துவப் படிப்பிற்கே விண்ணப்பிக்கவில்லை என்பது தெரிய வந்தது எனினும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெரியார், மாணவர்களை வீதியில் இறங்கி போராடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் ஒரு வருடமாக தொடர் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாகதான் 1951ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன் முறையாக திருத்தப்பட்டது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. ஆனால் கல்வியில் உறுதி செய்யவில்லை. ஆனால் தந்தை பெரியாரின் போராட்டம் காரணமாக ஒட்டு மொத்த இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்கள், சமுதாயத்திலும் கல்வியிலும் பின்தங்கி இருந்தால், அவர்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற திருத்தத்தை கொண்டு வந்தார்கள். இந்த சட்டத் திருத்தம் காரணமாக தான் இன்று இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் அனைரும், தந்தை பெரியார், தமிழ்நாடு நடத்திய போராட்டத்தால்தான் படித்தவர்கள் ஆவர். அவர்கள் வேறு யாராலும் கல்வி கற்கவில்லை.
ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கல்வி எப்படி இருந்தது. சோழர் ஆட்சிக் காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்பது தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். சோழர் ஆட்சிக்காலத்தில் தான் வெளியூர்களில் இருந்து பார்ப்பனர்களை இறக்குமதி செய்தனர். அவர்களுக்கு சதுர்வேதி மங்கலம், தேவதானம், பிரம்மதேயம் என்று அள்ளிக்கொடுத்த ஆட்சிதான் சோழர்கள் ஆட்சி. அப்போது, பார்ப்பனர்கள் மட்டும்தான் படித்தார்கள். தமிழர்கள் படிக்கவில்லை. தமிழகத்தில் வேதகல்வி வரலாறு என்று முனைவி சி. இளங்கோ ஆய்வுசெய்து எழுதியுள்ளார். அந்த நூலில் ராஜேந்திர சோழன் காலத்து கரந்தை செப்பேடுகள் கிடைத்துள்ளன. அதில் பார்ப்பனர்கள் வேதம் படிக்க நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் அவர்களை தமிழ் மன்னர்கள் என்று சொல்லலாமா? பார்ப்பன அடிவருடி என்று சொல்லமா? இதனை பெரியார் கேள்வி எழுப்பினார்.
நாடார் சமூக மக்க ஆலய நுழைவு போராட்டம் நடத்துகிறார்கள். அதற்காக நாடார் சமுதாய மக்கள் மீது வழக்கு தொடர்ந்து அபராதம் கட்ட சொல்கின்றனர். விசாரணையின்போது நாடார்கள் கோவிலுக்குள் போக தகுதி உள்ள சாதியா? என தெரிந்துகொள்ள ஒரு முத்த தமிழறிஞரை கூப்பிட்டு கேட்கிறார்கள். அந்த தமிழறிஞர் சொல்லுகிறார். நாடார்கள் கோவிலுக்கு போக தகுதி அற்றவர்கள். ஏனென்றால் அவர்கள் சூத்திரர்கள் என்று சொன்னார். அவர் வேறு யாரும் அல்ல. சீமானின் தாத்தாவாகிய உ.வே.சாமிநாத அய்யர் ஆவார். ஆனைமுத்து தான் 69 சதவிகித இடஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தார் என சீமான் சொல்கிறார். 69 சதவீத இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. அதற்கும், ஆனைமுத்துக்கும் எந்த சம்பந்தம் உள்ளது. மண்டல் கமிஷன் என்பது மத்தியில் இடஒதுக்கீடு வழங்க அமைக்கப்பட்டது. அது 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இப்படி அடிப்படை தரவுகளே தெரியாத சீமான் பாடம் எடுக்கிறார்.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து சீமான் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?. எப்படி வ.உ.சியை வைத்து பெரியாரை இழிவு படுத்தினாரோ, அதேபோல் தேவரை வைத்தும் செய்ய பார்க்கிறார். குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிராக பெரியார், அம்பேத்கர் பேசியுள்ளனர். அம்பேத்கர் 1933லேயே இந்திய அரசியல் சட்ட சீர்திருத்த குழுவின் முன்பு ஆஜராகி, கள்ளர், மறவர் உள்ளிட்ட 89 சாதிகள் குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் 1937ல் திவிரமாக குரல் கொடுத்துள்ளார். நீதிக்கட்சியும் இதற்காக போராடியது. 1933ல் முத்துராமலிங்க தேவரின் சமுதாயம் குற்றப்பரம்பரை பட்டியலில் சேர்க்கப்படுகிறார். அதன் பிறகு போராட்டத்திற்கு வருகிறார். 1934ல் மே 12ல் காங்கிரஸ் கட்சியின் வரதராஜுலு நாயுடுலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேவர் பங்கேற்றார். இதை வைத்து பெரியாரை வீழ்த்த நினைக்கிறார். அரசியல் நிர்ணய சபைக்கு தொழிலதிபரான டிடி கிருஷ்ணமாச்சாரியை அனுப்பியபோது, முத்துராமலிங்க தேவர், திருச்சியில் ரத்தினவேலு தேவர் போன்ற தலைவர்களை ஏன் அனுப்பக்கூடாது என கேள்வி எழுப்பினார் பெரியார். 1937லேயே பெரியார் தான் கொண்டுவந்த எழுத்து சீர் திருத்தத்தை செயல்படுத்திவிட்டார். குத்துசி குருசாமி போன்றோர் எல்லாம் பின்னாளில் வலியுறுத்தினார்கள். இது மணியரசன் பரப்பும் பொய் ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.