பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம் குறித்து நாடாளுமன்றத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையாகி உள்ள நிலையில், இது தொடர்பாக பாலச்சந்திரன் ஐஏஎஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- காஷ்மீரில் 3.5 லட்சம் ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர்கள், எந்த பகுதிக்கும் செல்லக்கூடிய வாகனங்கள் இருக்கிற போது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டு தீவிரவாதிகள் எப்படி தப்பிச்சென்றார்கள். முதலில் உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கவில்லை என்றார்கள். பின்னர் உளவுத்துறை தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படி உளவுத் தகவல் அளித்த பின்னரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவில்லை என்றால் அது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு ஆகும். உள்துறை அமைச்சரின் தவறு ஆகும். தற்போது இது குறித்து பேச அனுமதிக்க மறுக்கிறார்கள்.
ஒன்றுமே நடக்கவில்லை என்று நாடே கொந்தளித்தது. தண்ணீரை நிறுத்துவேன். கனவிலும் எதிர்பாராத மரண அடி கொடுப்பேன் என்று சொல்கிறார். அப்படி யாரையும் பிடிக்க முடியாது. சர்வதேச சட்டங்களின் படிதான் அவர்களை பிடிக்க முடியும். அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும். அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால், அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போகிறோம் என்று ஒரு திசை திருப்பும் டாக்டிக்ஸ் கொடுத்து பார்த்தார்கள். அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மக்கள் மீண்டும் கோபத்தில் கொந்தளித்தார்கள். அதனை பார்த்த பின்னர் 9 தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்துவிட்டதாக சொன்னார்கள். அப்படி தாக்குதல் நடத்துகிற போதே நாம் எதிர்தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தோம்.
என்றைக்கு இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தினார்களோ அன்றைக்கே அரசு மீது சந்தேகத்தை எழுப்பிக்கொண்டிருந்த என்னை போன்ற நடுநிலையாளர்கள் எல்லாம் அமைதியாகி விட்டோம். இன்றைக்கு தேவை அரசாங்கத்தின் பின்னாடி நாம் நிற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் நின்றார்கள். இந்திய மக்கள் நின்றார்கள். இந்தியாவே ஒன்று சேர்ந்து நமது அரசாங்கத்தின் பின்னால் நின்றோம். தாக்குதல் தொடங்கிய 4 நாட்களில் பாகிஸ்தான் உடன் போர் நிறுத்தத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டதாக தகவல் வந்தபோது, அதற்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போர் நிறுத்தம் அறிவிக்கிறார். இதுவே வேடிக்கையான விஷயமாகும். ஏன் என்றால் நாம் போர் நிறுத்தம் செய்கிறோம் என்றால் நம் தரப்பில் இருந்து தான் அறிவிக்க வேண்டும். மற்றவர்கள் அறிவிக்கக்கூடாது. இந்திய தரப்பில் இருந்து என்ன சொல்லப்பட்டது என்றால், நாங்களும் பாகிஸ்தானும் பேசிதான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. ஆனால் திரும்ப திரும்ப டிரம்ப் மிகவும் அழுத்தம் திருத்தமாக சொல்வது நாங்கள் இரவு பகலாக இரு தரப்பிடமும் பேசிக் கொண்டிருந்தோம். டிரம்ப் பேசினார் என்றால் மோடி, ஷெரீபிடம் தான் பேசுவார். அது குறித்து மத்திய அரசு எந்தவிதமான கருத்தும் சொல்ல மறுக்கிறார்கள்.
எங்களுடைய கேள்வி என்ன என்றால்? நீங்கள் இந்த 4 நாள் போரில் எதை சாதிக்க வேண்டும் என்று போரை தொடங்கினீர்கள். அந்த 9 இடங்களில் துல்லிய தாக்குதல் நடத்தினீர்களே அப்போது எதை சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்? அந்த குறிக்கோள் எந்த அளவுக்கு நிறைவேறி உள்ளது?. அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது என்றால், அதனால் போரை நிறுத்த வேண்டிய கட்டாயம் உங்களுக்கு என்ன நடந்தது? எதனால் அமெரிக்கா சொல்வதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தீர்கள். இது எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு என்ன என்றால்? எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சொல்வது போல நாடாளுமன்றத்தை கூட்டுங்கள். ஏற்கனவே பிரகலாத் ஜோஷி சொல்கிறார் நாங்கள் நாடாளுமன்றத்தை கூட்ட மாட்டோம் என்று. இதைவிட சர்வாதிகார போக்கு இருக்க முடியுமா? எல்லையில் என்னுடைய நாட்டு மக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவற்றை கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது. இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.