Homeசெய்திகள்கட்டுரைமுருக பக்த மாநாடு பூஜையிலேயே கலவர பேச்சு! நீதிமன்ற உத்தரவை மீறிய ஹெச்.ராஜா! எச்சரிக்கும் வழக்கறிஞர்...

முருக பக்த மாநாடு பூஜையிலேயே கலவர பேச்சு! நீதிமன்ற உத்தரவை மீறிய ஹெச்.ராஜா! எச்சரிக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

-

- Advertisement -

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பூஜையின்போதே ஹெச்.ராஜா கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார். இதன் மூலம் அங்கு நடைபெறுவது பக்தி மாநாடு அல்ல. அவர்களின் கட்சி மாநாடு என்பது உறுதியாகிறது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான தொடக்க பூஜையின்போது ஹெச்.ராஜா அரசு மீது பல்வேறு அவதூறுகளை முன்வைத்துள்ளது குறித்தும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திமுக ஆட்சியை அவுரங்கசீப் ஆட்சி என்று விமர்சித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஒரு கிறிஸ்தவர் என்றும் சொல்கிறார். முத்தமிழ் முருகன் மாநாட்டில், இந்து மதத்தை உதயநிதி கிருமி, கொரோனா என்றெல்லாம் பேசினார் என்றும் ஹெச்.ராஜா சொல்கிறார். அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இது அப்பட்டமான 200 சதவீத பொய் ஆகும். இப்படி அப்பட்டமான பொய்யை ஊடகத்தில் பேசும் ஹெச்.ராஜா மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.

இதற்கு முன்னதாக 2014ல் இந்துமத தர்ம பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ஹெச்.ராஜா, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். 2017ல் ஒரு திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக விமர்சனம் இருந்ததாக கூறி விஜயை, ஜோசப் விஜய் என்று விமர்சித்தார். திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பாக வழக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு தண்டனையும் கிடைத்துள்ளது. அமைச்சர் சேகர்பாபுவை, கிறிஸ்தவர் என்று விமர்சிக்கிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்கள் முன்பாக மிகவும் தைரியமாக பேசுவார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மன்னிப்பு கேட்டு தப்பிவிடுவார்.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பூஜையே இப்போது தான் தொடங்கி உள்ளது. அதற்குள்ளாகவே பிரச்சினையை தூண்டும் விதமாக ஹெச்.ராஜா பேசுகிறார். அப்போது சங் பரிவாரின் திட்டம் என்ன? எப்படி பேசுவார்கள் என்பது இன்றைக்கே தெரிந்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அனு அளித்திருக்கிறோம். அதில் வைத்துள்ள முக்கிய கோரிக்கை என்ன என்றால்? மாநாட்டை நடத்தும் இந்து முன்னணியை அழைத்து கூட்டத்தில் என்ன பேச போகிறார்கள் என்று எழுதி வாங்கிட வேண்டும். இந்த மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது, மதவெறி பேசக்கூடாது என்று எழுதி வாங்க வேண்டும்.

இது குறித்து தலைமை செயலாளரிடமும் நாங்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். குஜராத், உ.பி. போன்ற நிலைமை தமிழ்நாட்டில் வரவேக் கூடாது. அதற்கான அடிப்படை வேலைகளை சங்பரிவார் கூட்டம் கிராமங்கள் அளவில் இறங்கி செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எந்த கட்சியும் பேரபாயமாக கருதவில்லை. 2014ல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக முற்போக்கு சக்திகள் கூட ஒன்றிணைய வில்லை. சேர்ந்திருந்தால் தடுத்திருக்கலாம். இன்றைக்கு முருக பக்தர்கள் மாநாட்டையும் அப்படிதான் பல கட்சிகளும் பார்க்கிறார்கள். இது மிகவும் தவறு.

சங்பரிவார் அமைப்பு அடுத்து எவ்வளவு தீவிரமாக இறங்கி வருகிறார்கள் என்று பாருங்கள். உள்ளுக்குள் பல்வேறு சாதிகளை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். அனைத்து ரவுடிகளையும் மொத்தமாக கட்சியில் சேர்த்திருக்கிறார்கள். நாளைக்கு நாமெல்லலாம் பேச முடியாத ஒரு சூழலை உருவாக்க போகிறார்கள். எந்த கட்சி பேசினாலும் வந்து அடிப்பார்கள். அப்போது என்ன செய்ய முடியும். அதனால்தான் இந்த மாநாட்டை மிகத் தீவிரமாக எதிர்க்கிறோம்.முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய விதமாக பேசக்கூடிய ஹெச்.ராஜா, பவன் கல்யாண் போன்றவர்கள் வரமால் இருக்க அவர்கள், மதுரை மாவட்டத்திற்குள் நுழைய ஆட்சியர் தடை விதிக்கலாம்.

எல்.கே.அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை சென்று கலவரம் செய்தபோது, பீகாரில் அவரை கைது செய்தார்கள்.  அதேபோல, இங்கே யோகி ஆதித்யநாத் மத வன்முறையை தூண்டும் விதமாக பேசினால், மேடையில் இருந்து இறங்கும்போதே அவரை கைது செய்ய வேண்டும். ஹெச்.ராஜாவை பொறுத்தவரை தொடர்ச்சியாக குற்றப்பின்னணி  உள்ள நபர். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர். அவர் இந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது என காவல்துறை, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு, அவர் மதுரைக்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும்.

ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தொடர்பாக நீதிபதி புகழேந்தி அவர்கள் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் விதமாக பேசக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லி உள்ளபோதும், ஹெச்.ராஜா திமிராக பேசுகிறார் என்றால், அவருக்கு யார் தைரியம் கொடுக்கிறார்கள்? ஹெச்.ராஜா பேச்சின் மூலம் இந்த மாநாடு அரசியல் மாநாடுதான். கலவர மாநாடுதான் என்று தெரிந்துவிட்டது. இனி அவர்கள் தொடர்ந்து பேச தொடங்கி விடுவார்கள். அப்போது, முழுக்க தெரிந்துவிடும். அப்போது 22ஆம் தேதி காலையில் கூட தடை செய்வதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அவர்கள் பேசினால், அதையே காரணமாக வைத்து மாநாட்டை தடை செய்யுங்கள். அப்போது இவர்கள் இதுபோல் பேச மாட்டார்கள்.

திருமாவளவன், இன்றைக்கு தமிழகத்தில் ஒரு அரசியல் முதிர்ச்சி உடைய, பார்ப்பனிய மனுதர்மத்தை எதிர்க்கக்கூடிய உறுதியான தலைவர் ஆவார்.  அவரது சிந்தனை, கொள்கை தமிழ்நாட்டை ஒரு சரியான நிலை நிறுத்தியிருப்பதற்கு காரணமாகும்.  ஒரு வேளை அவர் பாஜக பக்கம் சரிந்திருந்தால் பெரிய சிக்கலாக மாறி இருக்கும். ஆனால் அவர் சீட்டை பார்க்காமல், நாட்டை பார்த்து நிற்கிறார். அதனால் ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு தாங்க முடியவில்லை. கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றவர்கள் பாஜகவின் காலடியில் போய் விழுந்துவிட்டார்கள். திருமாவளவன் ஒருவர் மட்டும் எதிர்த்து நிற்கிறார்.  சனாதன தர்மத்திற்கு எதிராக முதன்முதலில் மாநாடு நடத்தியதும், இன்றைக்கு மதச்சார்பின்மைக்காகவும் அவர் மாநாடு நடத்தியுள்ளார். பார்ப்பனியத்திற்கு  சிம்ம சொப்பனமாக திருமாவளவன் இருக்கிறார் என்பதால், ஹெச்.ராஜா தனது வயிற்று எரிச்சலை கக்கி இருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ