தேர்தலில் நின்று பலத்தை நிரூபிக்காத விஜய், சிறுபான்மை வாக்குகளை பிரிப்பார் என்பது தவறானது என்றும், சிறுபான்மை மக்களின் வாக்குகள் திமுகவுக்கு தான் கிடைக்கும் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும், திமுக கூட்டணியின் பலம் குறித்தும் வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நயினார் நாகேந்திரன் ஆன்மீகமும் அரசியலும் கலந்த ஊர் என்று சொல்கிறார். அவருக்கு இன்னும் தமிழ்நாட்டு அரசியல் புரியவில்லை என்று நினைக்கிறார். தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் என்பது எங்கும் கிடையாது. சமூகநீதியும், சமத்துவமும் தான் எப்போதும் தமிழ்நாட்டின் அரசியலின் பிரதான குறியீடுகளாக இருந்துள்ளது. ஆன்மீகம் என்பது தமிழ்நாட்டின் அரசியல் குறியீடு அல்ல. அது திடீரென ரஜினி போன்றவர்கள் இங்கு வந்து பேசிய அரசியலாகும். தொடக்க நிலையிலேயே அந்த அரசியல் எடுபடாது என்பதற்கு ரஜினி வராமல் போனதுதான் சாட்சியாகும். எனவே ஆன்மிக அரசியலுக்கு இங்கு வேலையில்லை. அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை தன்னுடைய விருப்பம் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் என்று சொல்லியுள்ளார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிற வேலையை அவர் செய்கிறார். அண்ணாமலை பலி கொடுக்கப்பட்டதே அதிமுக கூட்டணிக்காக தான். அதிமுகவை மெல்ல கபளீகரம் செய்வதற்கு அண்ணாமலை தகுதியான நபராக இல்லை. அவர் முரண்பாடுகளோடு அணுகுகிறார். எனவே அதிமுகவை கைப்பற்ற முடியாது. அதனால் நயினார் போன்று அதிமுகவின் முழு அரசியலையும் கரைத்துக்குடித்த ஒருவர் தேவைப்படுகிறார். அதனால் அவரை தலைவராக போட்டார்கள். அதற்கு வேட்டு வைக்கும் வேலையை அண்ணாமலை போன்றவர்கள் செய்கிறார்.
அதிமுகவுக்கு மாநில சுயாட்சி குறித்த பார்வை இருக்கிறதா? இல்லையா? அது குறித்த பார்வை உள்ளது என்றால்? அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி கருத்துக்கு ஏன் தொடக்க நிலையிலயே முட்டுக்கட்டை போடவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது. அண்ணாமலை கூட்டணியை சிதைப்பது போன்று பாஜக ஆட்சி என்று சொல்கிறார். அவருக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டியது தானே. ஏன் அவர் விளக்கம் கேட்கவில்லை. திமுகவும், அதிமுகவும் பிரதான கட்சிகள். இந்த 2 இயக்கங்களை நம்பிதான் தமிழ்நாட்டில் கூட்டணியை கட்டமைக்க முடியும். இதை இரண்டையும் தவிர்த்து ஒரு கூட்டணி அமைகிறது என்றால் அது மண் குதிரைதான். மாற்று அரசியல் உருவாக வேண்டும் என்று எண்ணம் இருப்பவர்கள் கூட இரு கட்சி தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கின்ற மனநிலையில் தான் உள்ளனர். இங்கு கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக தான் என்கிறபோது பாஜக எங்கிருந்து லீடு எடுக்கிறது. அமித்ஷா 2 முறை கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்லிவிட்டார். அப்போது, ஏக்நாத் ஷிண்டே போல எடப்பாடி பழனிசாமியை கைப்பாவையாக வைத்துக்கொண்டு அரசை நகர்த்த பாஜக தயாராகி உள்ளது என்பது நயினார் நாகேந்திரனின் கருத்து ஆகும்.
கொல்லைப்புற வழியாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். மத்தியில் ஆட்சியில் உள்ளதாலும், தேர்தல் ஆணையம் அவர்களது கைப்பாவையாக மாறியுள்ளதால் இதுபோன்ற அச்ச உணர்வு கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அவ்வளவு எளிதாக அதனை செய்துவிட முடியாது. 5 இடங்களில் வெற்றி பெற்றாலே அதிமுக ஓரளவுக்கு பலம்பெறும் என்றால்? அதிமுகவை முன்வைத்து பின்னால் இருந்து இயக்குவார்கள். இது தேர்தல் கணக்கு. ஆனால் பாஜகவின் கொல்லைப்புற கணக்கு என்பது மீட்டரில் சூடு வைப்பதாகும். அந்த வேலையை செய்கிற ஒரு சூழலும் இங்கே உருவாகும் என்கிற பயம் ஏற்பட்டுள்ளது. ஏன் என்றால் இவ்வளவு உறுதிபாட்டோடு சொல்கிறார்கள். திமுக அரசு மீது மக்களுக்கு எந்த விதமான எதிர்ப்பு உணர்வும் கிடையாது. கூட்டணியும் வலுவானதாக உள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ, தேமுதிக போன்ற கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளன.
நடிகர் விஜய் இன்னும் தேர்தல் களத்திற்கே வராத நிலையில், அந்த கட்சி 14 சதவீத வாக்குகளை பெறும் என்று அதிமுகவின் ராம.சீனிவாசன் சொல்கிறார். எந்த அடிப்படையில் இந்த கணக்கை சொல்கிறார். சிறுபான்மை மக்களின் வாக்குகள் சிதறும் என்பது தவறான கூற்றாகும். சிஏஏ சட்டம், வக்பு சட்டத்தை எதிர்த்து சண்டை செய்யும் ஒரே இயக்கம் திமுகதான். இது தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு தெரியாதா? அவ்வளவு எளிதாக விஜய்க்கு வாக்களித்து விடுவார்களா? புதிய வாக்காளர்கள் விஜயின், திரைப்பட ஈர்ப்புக்காக வாக்களிக்கலாம். தலித் சமுதாய வாக்குகள் என்பது திமுக, அதிமுகவுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை. வடமாவட்டங்களில் தலித் மக்களின் வாக்குகளை கைவசம் வைத்துள்ள விசிக திமுக கூட்டணியில் உள்ளது. தென் மாவட்டங்களில் சேதாரம் இருக்கத்தான் செய்கிறது. அது அதிமுகவுக்கு தான் சாதகமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்