அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளியின் செல்போன் பிளைட் மோடில் தான் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டால், யார் அந்த சார்? என்பது புரளி என தெரிந்துவிடும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எழுப்பப்படும் யார் அந்த சார்? விவகாரம் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடக்கத்தில் சில சொதப்பல்கள் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அமைச்சர் அறிக்கை விட்டிருக்கக்கூடாது. காவல் ஆணையர் அருண் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். மாணவி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், காவல் ஆணையருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. உரிய அனுமதியின்றி செய்தியாளர்களை சந்தித்து இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் உயர் நீதிமன்றத்திற்கு நடைமுறைகள் தெரியவில்லை என கருதுகிறேன். ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்போது, அதனை ஹேண்டில் செய்பவர்கள் செய்தியாளர்களை சந்திக்கலாம். மாவட்டத்தில் ஆட்சியர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமான ஒன்று. மாணவி வன்புணர்வு சம்பவம் என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதால் அவர் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து இருந்தால் அது தவறு இல்லை. அப்போது, ஞானசேகர் ஒருவர்தான், அவர் சார் என்று சொன்னது அந்த பெண்ணை மிரட்டுவதற்காக தான். அவர் போனை பிளைட் மோடில் வைத்துக்கொண்டு பேசினார் என ஆணையர் தெரிவித்தார். அப்படி அவர் பிளைட் மோடில் தான் பேசினார் என்றால் அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டிய கடமையும் காவல் ஆணையர் அருணுக்கு உள்ளது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் போன் எந்த நேரத்தில் பிளைட் மோடில் இருந்தது என்பதை கண்டுபிடிக்க முடியும். அந்த அடிப்படையில் காவல் ஆணையர் சொல்லி இருந்தால் அதனை காவல் ஆணையர் அருண் விளக்கமாக சொல்லிவிட வேண்டும். இதுபோன்ற விவாதங்கள் வரும்போது, ஒரு நடுநிலையான குழு அமைத்து, அவர்கள் ஞானசேகரின் செல்போனை பார்த்து சொல்லட்டும் என்று கூறினால் இந்த சந்தேகம் தீர்ந்துவிடும். பாதிக்கப்பட்ட பெண் திரும்ப திரும்ப சொல்கிறார். அந்த பெண் தான் பார்த்ததை சொல்கிறார். அவர் பொய் சொல்வதற்கான வாய்ப்பு இல்லை. அவர் பார்த்ததையும், கேட்டதையும் சொல்லியுள்ளார். ஞானசேகர் பிளைட் மோடில் பேசினார் என்றால் அதற்கான தொழில்நுட்ப ஆதாரங்களை வெளிப்படையாக கூற வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கு விசாரணையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. உண்மை குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பது தவறி போகாது.

இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே அமைச்சர்கள், குற்றவாளி ஞானசேகர் திமுககாரர் இல்லை இல்லை என்று கூற என்ன அவசியம் வந்தது. குற்றவாளி என்பவர் குற்றவாளிதான். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் அவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எந்த ஒரு கட்சியிலும் தவறு செய்பவர்கள் இருக்காமல் இருக்க முடியாது. அதற்காக அந்த கட்சியையே தவறு செய்யும் கட்சியாக சொல்லிவிடுவார்களா. இதேபோல் போதை பொருள் வழக்கில் சிக்கிய நிர்வாகியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுபோல, மாணவி பாலியல் வழக்கில் தொடர்பு உடையவர் திமுகவில் இருந்தால் உடனடியாக அவரை நீக்கி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தை திமுக சரியாக கையாள வில்லை. இந்த விவகாரத்தில் திமுக தங்களுக்கு தாங்களே சிக்கலை ஏற்படுத்தி கொள்கின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை திமுக மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டது. அதேபோல, இன்று அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை என்றால், திமுக அரசு தொடக்கத்தில் செய்த தவறுகள் காரணமாக இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகள் கூட வரும். மக்கள் எப்போது வெளிப்படைத்தன்மை குறைவாக உள்ளதாக நினைக்கின்றனரோ அப்போது வரக்கூடிய அனைத்து வதந்திகளையும் நம்பி விடுவார்கள். என்னை பொருத்தவரை ஞானசேகர் முதன் முறையாக இந்த செயலை செய்யவில்லை. நாம் புகார் அளித்த மாணவியின் துணிச்சலை கட்டாயம் பாராட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் தர வேண்டும் என நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால் யார் கொடுப்பது என்பது என நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. மாணவி விவகாரத்தில் எந்த சாரும் இல்லை எனில், அவரது செல்போன் பிளைட் மோடில் இருந்ததற்கான ஆதாரங்களை காவல்துறை வெளியிட வேண்டும். விமர்சனங்களை தவிர்க்க இதை தவிர வேறு வழி இல்லை.
மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் கைதான குற்றவாளி ஞானசேகர் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படி ஒவ்வொரு விஷயமாக வெளிவரும்போது எது உண்மை? எது பொய் என்று தெரியாமல் போய்விடும். எனவே இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதாமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திட வேணடும். அப்போது வழக்கு விசாரணை தொடங்கிவிட்டால் அவரிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அப்போது, வெளியில் சொல்லப்படும் எது உண்மை எது பொய் என தெரிந்துவிடும். எனினும் இந்த விவகாரத்தில் காவல் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை உள்ளது. குற்றவாளி ஞானசேகர் பிளைட் மோடில் தான் வைத்து பேசினார் என ஆணையர் அருண் தெரிவித்ததுள்ளார் என்றால் அதற்கான ஆதாரத்தை காணபிக்க வேண்டும். எதோ ஒரு ஆதாரத்தின் அடிப்படையில்தான் காவல் ஆணையர் இதனை தெரித்துள்ளார். அதற்கான ஆராதரத்தை வெளியிட வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. ஏனெனில் இன்று அதுதான் பிரச்சினையாக உள்ளது. எடுத்த எடுப்பிலேயே அமைச்சர் குற்றவாளி திமுக இல்லை என்று அறிக்கை வெயிட்டது தேவை அற்றது. எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருவதால் காவல் ஆணையர் தனக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தகவல் தெரிவித்துள்ளார்.
எடுத்த எடுப்பிலேயே அவர் கட்சிக்காரர் இல்லை என்று சொன்னதால், அடுத்து அவர்கள் ஒவ்வொன்றையும் ஆதாரம் ஆதாரம் என்று காட்டிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொறையும் மறுதலித்துக் கொண்டிருக்க வேண்டும். முதலிலேயே அவர் எந்த கட்சியினராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிரச்சினை எடுக்காவிட்டால் தான் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர் திமுககாரர் இல்லை என அறிக்கை விட்டது தேவை இல்லாது. ஞானசேகர் இவர்களிடம் பேசினார், அவர்களிடம் பேசினார் என்பது எல்லாமே ஓரு யூகம் தான். அதனை எப்படி மறுதலிப்பீர்கள். ஞானசேகர், யாரிடமும் பேசவில்லை என்று சொன்னவர் காவல் ஆணையர். அதற்கான ஆதாரத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
செல்போன் பிளைட் மோடில் இருக்கிறது என்று எதோ ஒரு ஆதாரத்தை அடிப்படையாக கொண்டுதான் காவல் ஆணையர் இதனை தெரிவித்துள்ளார். அதனால் அந்த ஆதாரத்தை வெளியிட வேண்டும். அந்த பெண் குற்றவாளி பேசியதை தான் சொல்லியுள்ளார். ஆனால் அவர் உண்மையிலேயே பேசினாரா? அல்லது சும்மா போனை வைத்து மிரட்டினாரா? என்பது அந்த பெண்ணிற்கு தெரியாது. அதனை தான் அவர் சொல்லியுள்ளார். ஆனால் காவல் ஆணையர் பிளைட் மோடில் தான் வைத்து பேசியதாக கூறியுள்ளார். இந்த ஆதாரத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டியது கட்டாயம். சாதாரணமாக குற்ற வழக்கு விசாரணையில் வழக்கு விவரங்களை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் இது சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய விதமாகவும், அரசு மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் விதமான இந்த விவகாரத்தில் விவரங்களை சொல்ல வேண்டியது கட்டாயம். ஞானசேகரின் செல்போன் பிளைட் மோடில்தான் இருந்தது என்றும், அது சரியான ஆதாரமாக இருந்து விட்டால் யார் அந்த சார்? என்ற புரளியே ஏற்பட்டிருக்காது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.