தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின் பேரணியில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தம்பி வேடன் 3 நாட்களுக்கு முன்பாக என்னிடம் போனில் பேசினார். நான் சொன்னேன், 35 வருடமாக நான் பேசுகிற அரசியலை 3 நிமிடங்களில் பாட்டில் சொல்லிவிட்டாய். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று சொன்னேன். அவர் சொன்னார், ஐயா நீங்கள் எல்லாம் பேசுவதால்தான் நாங்கள் எல்லாம் பாடுகிறோம் என்று அவர் சொன்னான். என்னிடம் நீங்கள் மட்டும் கோட்டு சூட்டு போட்டால் பத்தாதா? ஏன் எல்லோரும் போட வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று தோழர்கள் கேட்கிறார்கள். என் கண்ணால் பார்க்க வேண்டும். கட்டிட வேலை செய்பவன் கோட்டு சூட்டு போட வேண்டும். ஆடு மாடு மேய்க்கிற தம்பி, ஆட்டோ ஓட்டுகிற தம்பி கோட்டு சூட்டு போட்டு பார்க்க வேண்டும். அவருக்கு காக்கி சட்டைதான் கதி என்று எண்ணக்கூடாது. அம்பேத்கர், ஒவ்வொரு நாளும் கோட்டு சூட்டோடு தான் வெளியே போவார். அந்த குடும்பம் வறுமையில் உழன்ற போதும், உடையிலே கவனம் செலுத்தியவர் அம்பேத்கர்.
இன்றைக்கு என்னுடைய தம்பிகள் அனைவரும் என்னுடன் வந்து கோட்டு சூட்டோடு நிற்கின்றனர். சனாதன சக்திகளே அம்பேத்கர் இறந்துவிட்டார் என்று நினைக்காதீர்கள். இதோ அம்பேத்கரின் பிள்ளைகள் இருக்கிறோம். அம்பேத்கரின் கருத்தியல் வாரிசுகள் இருக்கிறோம். எங்களை கூமுட்டைகள் என்று எண்ணாதீர்கள். கண்ணில் விரலை விட்டு ஆட்டுவோம். அரசியல் எங்களிடம் பேச முடியாது. உங்களை போன்று சாதி வெறியை பேசுபவர்கள் அல்ல. ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்று சொல்லக்கூடியவர்கள் அல்ல. அறிவுப் பரம்பரை, ஞான வம்சத்தை சார்ந்தவர்கள். எங்கள் தலைவர் அம்பேத்கர் என்று சொல்லுகிற போதே எங்களுக்கு மெய்சிலிர்ப்பு ஏற்படுகிறது.
திமுக உடன் நாம் கொண்டிருக்கும் உறவு என்பது கொள்கை உறவாகும். இடங்களை பற்றி பேச்சுவார்த்தையில் முடிவு செய்துகொள்வோம். அது வேறு. திமுக அரசோடு எங்களுக்கு இருக்கிற விமர்சனங்களை தாண்டி, நாங்கள் தேர்தல் உறவு வைத்துக் கொள்கிறோம் என்றால் அது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஒரு கொள்கை முடிவு ஆகும். இதை யார் புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ அதை சிறுத்தைகள் புரிந்துகொள்ள வேண்டும். சில பேர் சினிமா புகழோடு, ஹீரோ என்கிற அந்த வேஷத்தோடும் வந்திருக்கிறார்கள். நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எல்லோரும் தலித் இளைஞர்கள் சினிமா நடிகர்கள் பின்னால் சென்றுவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். நான் சொன்னேன், அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும், எந்த விளம்பர மாயைக்கு அடிபணிய மாட்டான். விலைபோக மாட்டான் என்று சொன்னேன். அம்பேத்கர் அரசியல் என்பதே வேறு. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் 100 படத்திற்கு ஹீரோவாகி இருக்கலாம். ஆனால் லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு நிகரானவர் அம்பேத்கர். ஒரு வாக்கு சிதறாது. சிறுத்தைகள் எந்த பக்கமோ அந்த பக்கம் தான் ஆட்சி. அப்படிபட்ட இந்த இயக்கம் இன்றைக்கு தேர்தலை பற்றி கவலைப்படாமல் தேசத்தை பற்றி கவலைப்படுகிறது. அதுதான் இந்த பேரணி.
இங்கு தமிழ் தேசியம் என்கிற பெயரால் திமுக வெறுப்பு அரசியல் மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக திராவிட இயக்க அரசியலையே எதிர்த்து வெறுப்பு பரப்புவதன் மூலம் சனாதன சக்திகளுக்கு துணை போகிறார்கள். இவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பெரியாரை கன்னடர் என்று சொன்னால், அம்பேத்கரை மராட்டியரை என்று சொல்வீர்களா? அம்பேத்கரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் யாரை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். மோடி – அமித்ஷாவை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அண்ணாமலையை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? நயினாரை தலைவராக ஏற்றுக்கொள்வதா? நடிகர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்வதா? பெரியாரும், அம்பேத்கரும் நண்பர்கள். அம்பேத்கருக்கு நாம் துரோகம் செய்யக்கூடாது.
எல்லோரும் தேர்தல் கணக்குகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. எத்தனை இடங்கள்?, யார் முதலமைச்சர்? என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. விசிக, திமுகவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்கிறார்கள். அட அற்பர்களே… அரசியல் அறியாமையில் உலறும் அரைவேக்காடுகளே… தமிழ்நாட்டின் அரசியலில் திசைவெளியை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள். சொல்லப்போனால் இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலை சிறுத்தைகள். இன்றைக்கு மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள், மதச்சார்பின்மைக்கு ஆதரவாளர்கள் என்று கூர்மைப்படுத்துகிற அரசியலையை விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான் முன்னெடுக்கிறது. சனாதன சக்திகளே அம்பேத்கர் இறந்துவிட்டார் என்று நினைக்காதீர்கள். இதோ அம்பேத்கரின் வாரிசுகள் இருக்கிறோம்.
திருமாவளவனுக்கு அரசியல் பண்ண தெரியவில்லை. பேரம் பேச தெரியவில்லை. பிளாக்மைல் செய்ய தெரியவில்லை. துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்க மறுக்கிறார் என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் பதவி குறித்தே நாங்கள் கவலைப்படவில்லை. துணை முதலமைச்சர் பதவியா? எங்கள் தந்தை அம்பேத்கர், பிரதமர் பதவியை கைப்பற்றுகிறேன் என்றுதான் வழிகாட்டி இருக்கிறார். அதுதான் அதிகாரம் கொண்ட பதவி. தலித்துகள், பழங்குடி மக்கள் மற்றும் இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். இதுதான் அம்பேத்கர் கண்ட கனவு. எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். திருமாவளவனுக்கு தெரியும். விடுதலை சிறுத்தைகளுக்கு தெரியும். சும்மா யூடியூப்பில் உட்கார்ந்துகொண்டு கண்டவர்கள் எல்லாம் நமக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள். 35 வருஷமாக இந்த அரசியலில் நாங்களும் பழம் தின்று கொட்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். 10 ஆண்டு காலம் தேர்தல் அரசியல் வேண்டாம் என்று, அரசியல் செய்தவர்கள் நாங்கள். 25 வருஷம் இந்த தில்லுமுள்ளு தேர்தல் அரசியலில் தாக்குப்பிடித்திருப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள்.
சமகாலத்தில் எங்களோடு புறப்பட்டவர்கள் எங்கோ வழி தவறி போய்விட்டார்கள். இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. ஆந்திராவிலும் வேர் பிடித்திருக்கிறது. தெலுங்கானாவில் கிளை பரப்பி நிற்கிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் துளிர் விட்டு நிற்கிறது. விசிக இன்று எல்லா வரம்புகளையும் கடந்து, வளர்ந்து, நிமிர்ந்து நிற்கிறது. எங்களுக்கு யாருடைய அட்வைசும் தேவையில்லை. இன்றைக்கு சில நாதாரிகள் புறப்பட்டு இருக்கிறார்கள். நாம் பட்டியல் சமூகத்து மக்களை ஏமாற்ற வேண்டுமாம். இவர்களை எல்லாம் என்ன சொல்வது. இன்றைக்கு தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்றால்? சமூக தளத்திலும், அரசியல் தளத்திலும், பொருளாதார தளத்திலும், கலாச்சார தளத்திலும், கலையுலகத்திலும் இன்றைக்கு தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் என்றால்? விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழுச்சி தான் அதற்கு காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.